திருவள்ளூரில்..

திருவள்ளூரை அடுத்த கொசவம்பாளையம் பகுதியில் சுடுகாடு ஒன்று அமைந்திருக்கிறது. இந்த பகுதி வழியாக சென்ற சிலர் குழந்தையின் அழுகை சத்தத்தை கேட்டுள்ளனர். சத்தத்தை வைத்து குழந்தையை தேடியபோது குழந்தை அங்கிருந்த ஒரு பள்ளத்தில் விழுந்து கிடந்துள்ளது.
இதனையடுத்து பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் வந்த அவர்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே உயிரிழந்தது. இதனையடுத்து கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் விசாரணையை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த கணவனை இழந்த இளம்பெண்ணை கைதுசெய்துள்ளனர். அவர் ஆண் நண்பருடன் நெருங்கி பழகியதால் கர்ப்பமடைந்து குழந்தை பெற்றுள்ளார் என்றும்,

விஷயம் வெளியில் தெரிந்தால் பிரச்னையாகிவிடும் என பயந்து தற்போது குழந்தையை கொன்றிருக்கிறார் எனவும் ஊர் மக்கள் கூறுகின்றனர். இது குறித்து போலீசார் கூறுகையில்,
“குழந்தையை நாங்கள் பள்ளத்திலிருந்து மீட்டபோது அதன் தலை மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டிருந்தது. உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டது.

இதையடுத்து விசாரணை மேற்கொண்டதில் இதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை கைது செய்துள்ளோம். இவர் கணவனை இழந்து வாழ்ந்து வருகிறார்.
இப்படி இருக்கையில் ஆண் நண்பருடன் நெருங்கி பழகியதில் கர்ப்பமடைந்திருக்கிறார். அதன் தொடர்ச்சியாக தற்போது குழந்தையையும் பெற்றிருக்கிறார்.

எனவே இவர்தான் குழந்தையை கொன்றாரா? அல்லது இதில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். நீதிமன்றம்தான் இந்த சம்பவத்தில் யார் குற்றவாளி என்பதை இறுதி செய்யும்.
நாங்கள் எங்கள் தரப்பிலிருந்து சாட்சியங்களை கொடுக்கிறோம்” என்று கூறியுள்ளனர். சமூகத்திற்கு பயந்து, பெற்ற சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் திருவள்ளூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது















