இந்தியா..

இந்தியாவின் பல பகுதிகளில் மழை பெய்ந்தால் பேய்மழை, காய்ந்தால் வறட்சி என்ற அளவில் இயற்கை கடந்த சில வருடங்களாக மனிதனை அலைக்கழித்து வருகிறது.இதனையடுத்து மத்திய மாநில அரசுகள் பெருவெள்ளத்தில் தங்களை தற்காத்து கொள்வது எப்படி என விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் ஒத்திகை நடைபெற்றது.

இந்த ஒத்திகையில் பேரிடர் நிவாரண அமைப்பு, தீயணைப்புத்துறை, வருவாய் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த வகையில் பத்தனம்திட்டா அருகே கல்லுப்பாறை பகுதியில் உள்ள ஆற்றில் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விளக்கம் அளிப்பதற்காக நீச்சல் தெரிந்த 4 தன்னார்வலர்கள் அழைத்து வரப்பட்டனர்.

அவர்களை வைத்து ஒத்திகை நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது.இதில் கலந்து கொண்ட 35 வயது பினு சோமன் எதிர்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கி விட்டார்.

அவருக்கு நீச்சல் தெரியும் என்ற போதிலும் ஆழமான பகுதிக்கு சென்றவுடன் மூழ்கத் தொடங்கினார். இதனால் அவரை உடனடியாக காப்பாற்ற முடியவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு பினு சோமனை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் அவர் அதற்குள் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியின் போது இளைஞர் ஆற்றில் மூழ்கி இறந்தது பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் போது முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றும், ஆற்றில் மூழ்கிய இளைஞரை உடனடியாக மருத்துவமனை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வசதிகளும் இல்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.















