கண்ணை மறைத்த கள்ளக்காதல் : ஸ்கெட்ச் போட்டு கணவனை தூக்கிய மனைவி!!

4983

கிருஷ்ணகிரி..

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(48). இவர் வாகனத்தை திருடி விற்பனை செய்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இவரது மனைவி சித்ரா(44), தற்போது சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஜெகதீஷ்குமார்(19) என்ற மகன் உள்ளார்.

முன்னாள் காவலர் செந்தில் குமார் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்துவந்தனர்.


இந்நிலையில், ஊத்தங்கரை அடுத்த கல்லாவி பகுதியில் தனது தாய் பாக்கியம் வீட்டில் வசித்து வந்த செந்தில் குமார், கடந்த செப்டம்பர் மாதம் மாதம் 16ம் தேதி திடீரென மாயமானார்.

இதுகுறித்து அவரது தாய் மகனை காணவில்லை புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சந்தேகத்தின் பேரில் ஜெகதீஷ்குமார் மற்றும் கமல்ராஜ்(37) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.

போலீஸ் விசாரணைக்கு பயந்து கிருஷ்ணகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் செந்தில்குமாரை கொலை செய்து, தென்பெண்ணை ஆற்றில் வீசி விட்டதாக வாக்குமூலம் அளித்தனர்.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த கொலை சம்பந்தமாக, ஊத்தங்கரை டிஎஸ்பி அமலஎட்வின், செந்தில்குமாரின் மனைவி சித்ராவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டார்.

இதனிடையே, நேற்று முன்தினம் அழுகிய நிலையில் செந்தில்குமாரின் உடலை, விவசாய கிணற்றில் இருந்து மீட்ட போலீசார், சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்து, அவரது உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைத்தனர்.

மேலும், போலீசார் விசாரணையில் செந்தில்குமாரை கூலிப்படையை ஏவி மனைவியே கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் எஸ்எஸ்ஐ சித்ரா, பாரதிபுரத்தை சேர்ந்த பெண் சாமியார் சரோஜா(32), கூலிப்படையை சேர்ந்த விஜயகுமார்(21), ராஜபாண்டியன் (32) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.