சென்னையில்..

சென்னை திருவொற்றியூர், சேஷாசலாகிராமணி தெருவில் வசித்து வருபவர் டேவிட். இவரது மகன் கரண் (19). இவர், மாதவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3ம் ஆண்டு படித்து வந்தார். குத்துச் சண்டையில் ஆர்வம் கொண்ட இவர், அதற்கான பயிற்சியும் பெற்று வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு வந்த கரண், தனது அறைக்குள் சென்று கதவை உள்புறமாக பூட்டிக்கொண்டார். நீண்டநேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர், நீண்டநேரம் கதவை தட்டி பார்த்தும் திறக்கவில்லை.

இதனால் வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அறையில் உள்ள மின்விசிறியில் கரண் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து திருவொற்றியூர் போலீசார் தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவொற்றியூர் போலீசார், தூக்கில் தொங்கிய கரண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அறையில் இருந்த கரண் பயன்படுத்திய செல்போனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். ஆனால் அதில் இருந்த வீடியோ, புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு இருந்தது. கரண் எதற்காக தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்? என்பது தெரியவில்லை.

தற்கொலைக்கு முன்பு அவர் தனது செல்போனில் உள்ள அனைத்து பதிவுகளையும் அழித்தது ஏன்? என்பது மர்மமாக உள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.















