கள்ளக்காதலால் பரிதாபமாக உயிரை பறிகொடுத்த இளைஞன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

615

கள்ளக்குறிச்சி..

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகேயுள்ளது மணலூர் கிராமம். இங்கிருக்கும் கல்குவாரி ஒன்றில், கட்டப்பட்ட சாக்குமூட்டை ஒன்று மிதப்பதாக வடபொன்பரப்பி காவல்துறையினருக்குத் தகவல் சென்றிருக்கிறது.

அதனடிப்படையில், இன்று காலை சம்பவ இடத்துக்கு வந்த வடபொன்பரப்பி காவல்துறையினர், அந்தக் கல்குவாரியில் ஆய்வுசெய்தனர். கட்டப்பட்டிருந்த நிலையில், மிதந்த சணல் சாக்குமூட்டையை மீட்டு ஆராய்ந்தபோது, அதில் 22 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று இருந்திருக்கிறது.

அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.


அந்த இளைஞர் மணலூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கதுரை என்பது விசாரணையில் தெரியவந்தது. எனவே, இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்த வடபொன்பரப்பி காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், கொலைசெய்யப்பட்ட இளைஞர் தங்கதுரைக்கு, அதே கிராமத்தைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் திருமணம் மீறிய உறவு இருந்துவந்தது தெரியவந்திருக்கிறது.

இந்த உறவை அந்தப் பெண் தவிர்க்க முயன்றபோதும், இந்த இளைஞர் தொடர் தொல்லை கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், நேற்று முன்தினம் இரவு இந்த இளைஞரைக் கொலைசெய்து இவ்வாறு குவாரியில் வீசியதாக அதிர்ச்சித் தகவல்கள் தெரியவந்திருக்கின்றன.

மேலும், இந்தக் கொலைக்கு வேறு காரணம் ஏதும் இருக்கிறதா… இதில் வேறு யாராவது சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இளைஞர் ஒருவர் கொலைசெய்யப்பட்டு, குவாரி பள்ளத்தில் வீசிச் செல்லப்பட்டிருக்கும் சம்பவம் சின்னசேலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.