ஒரே அறையில் காதலியுடன் தங்கி இருந்த வெளிநாட்டு வாலிபர் திடீர் மரணமடைந்த நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி அண்ணா நகரில் கென்யா புசியா மேற்கு மாவட்டத்தை சேர்ந்த கெகோங்கோ டேனியல் (29) என்பவர் வாடகை வீட்டில் தங்கியிருந்தபடியே தனியார் இன்ஜினியரிங் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார்.
கடந்த 2021ல் படிப்பதற்காக சேலத்திற்கு வந்திருந்தவர் அதன் பின்னர் தனது படிப்பை பாதியில் நிறுத்தினார். இவருடன் காதலியான உகாண்டாவை சேர்ந்த நபுகீரா ஹெலனும் (33) ஒரே அறையில் தங்கியிருந்தார்.
நபுகீரா புதுச்சேரியில் படித்து வருகிறார். அங்கிருக்கும் நேரத்தை விட, டேனியலுடன் இருக்கும் நேரம் தான் அதிகம் என்று கூறப்படுகிறது. இருவரும் லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 27ம் தேதி மது அருந்தி விட்டு, மாடியின் சுவரில் அமர்ந்திருந்த டேனியல் திடீரென தவறி கீழே விழுந்தார். இதைப் பார்த்த காதலி நபுகீரா ஹெலன் அலறியடித்தப்படியே கதறிக்கொண்டு ஓடிசென்று டேனியலைத் தூக்கி உள்ளார்.
நபுகீராவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் டேனியலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது தலை, இடுப்பு, கால் ஆகிய இடங்களில் படுகாயம் இருந்தது.
இது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் அவரிடம் விசாரித்த போது, காதலியுடன் தங்கியிருந்ததாகவும், தங்களுக்குள் எந்த தகராறும் இல்லை எனவும், குடிபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்து விட்டதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் மருதுவமனையில் சிகிச்சை பெற்று வந்த டேனியல் திடீரென உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து காதலியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.