இந்தியாவில்..

லண்டன் செல்லும் கனவில் இருந்த இளைஞர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் டெல்லியை சேர்ந்தவர் அஷ்ரப் நவாஸ் கான் (30) இவர் டெல்லி ஐஐடியில் பிஎச்டி மாணவர் ஆவார்.

இந்த நிலையில் லண்டனில் வேலைக்கான நேர்முக தேர்வில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருந்தார் அஷ்ரப். ஏனெனில் தந்தையை சமீபத்தில் இழந்த அவருக்கு மூன்று சகோதரிகள் உள்ளனர்.

குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இருந்த சூழலில் தான் இந்த பெரும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இந்த மகிழ்ச்சியை கொண்டாட நண்பர்களுக்கு பார்ட்டி கொடுக்க முடிவு செய்தார்.

அதன்படி நேற்று இரவு 11.15 மணிக்கு அஷ்ரப் நண்பர்களுடன் வெளியே சென்றுவிட்டு தனது இருப்பிடத்துக்கு திரும்பினார். அப்போது அஷ்ரப்புடன் அவர் நண்பர் அங்கூர் ஷுக்லாவும் இருந்தார்.

இருவரும் சாலையை கடந்த போது மிகவேகமாக வந்த கார் அவர்கள் மீது மோதியது. படுகாயமடைந்த அஷ்ரப் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட அங்கூர் சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்த அஷ்ரப்பின் உறவினர் கூறுகையில், டெல்லியில் என்ன நடக்கிறது? இரவில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது ஏன்?

இதுபோன்ற விஷயங்களை அரசு தீவிரமாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காரை ஓட்டியவர் குடிபோதையில் இருந்திருக்க வேண்டும் என கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் அவிஹண்ட் ஷேராவத் (31) என்பவரை கைது செய்துள்ளனர்.















