குறுக்கே வந்த நாய்.. விபத்தில் உயிரிழந்த இளைஞர்: வீட்டுக்கே சென்று கண்ணீருடன் மன்னிப்பு கேட்ட நாய்!!

224

கர்நாடகாவில்..

கர்நாடக மாநிலம் தாவணிக்கரை பகுதியை அடுத்துள்ளது ஹோன்னாளி காசினகெரே என்ற கிராமம். இங்கு திப்பெஷ் (21) என்ற இளைஞர் ஒருவர் தனது குடும்பத்தோடு வசித்து வந்தார். இந்த சூழலில் கடந்த 16-ம் தேதி இரவு வழக்கம்போல் தனது வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் குறுபரவித்லபுரா என்ற கிராமம் அருகே இந்த இளைஞர் வந்து கொண்டிருந்தபோது, திடீரென நாய் ஒன்று குறுக்கே வந்துள்ளது.

இதனால் அந்த இளைஞர் நாய் மீது மோதிவிடக்கூடாது என்று தனது பைக்கை சற்று திருப்பிய நிலையில், கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் திப்பெஷின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த நிலையில், அருகே யாரும் இல்லாத காரணத்தினால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து சில மணி நேரம் கழித்து, இந்த விபத்து குறித்து தெரியவரவே, போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து உயிரிழந்த திப்பெஷின் உடல் இறுதி சடங்கிற்காக அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கே அனைத்தும் முடிந்த நிலையில், திபேஷின் உடலுக்கு இறுதி சடங்கு முடிக்கப்பட்டது.


இந்த நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்னர் விபத்திற்கு காரணமான நாய், உயிரிழந்த திபேஷின் வீட்டுக்கு சென்று கண்ணீரோடு அவரது தாய் முன் நின்றது. மேலும் தனது கால்களை உயர்த்தி, அவரிடம் மன்னிப்பும் கேட்டது. அந்த நாய் குறித்து விசாரிக்கையில், திபேஷின் விபத்திற்கு காரணம் அது என்று தெரியவந்தது.

இதையடுத்து அந்த நாய்க்கு ஆறுதல் கூறிய, திபேஷின் தாய், அதையும் தனது வீட்டிலேயே தற்போது வளர்த்து வருகிறார். நாய் குறுக்கே சென்றதால் விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது வீட்டுக்கே அந்த நாய் சென்று ஆறுதல் தெரிவித்த நிகழ்வு அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.