
இளவயது மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதிர்ச்சியளிக்கும் சம்பவமாக தாலி கட்டிய சிறிது நேரத்தில் புதுமாப்பிள்ளை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், பாகல்கோட்டை மாவட்டம் ஜமண்டி தாலுகா கும்பரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன் (26). இவருக்கும், பார்த்தனஹள்ளி கிராமத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுக்கும் இருவீட்டாரும் திருமணம் பேசி முடிவு செய்தனர்.
இவர்களது திருமணம் நேற்று ஜமகண்டியில் உள்ள நந்திகேஷ்வரா மண்டபத்தில் நடந்தது. காலை 10 மணிக்கு மணமகன் பிரவீன், மணமகளுக்கு தாலி கட்டினார்.
இதையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. மணமக்கள் மேடையில் நின்று புகைப்படம் எடுத்து கொண்டிருந்த போது திடீரென்று பிரவீனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் மயங்கி கீழே சரிந்து விழுந்தார்.
இதைப்பார்த்த குடும்பத்தினர் பிரவீனை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதைக்கேட்ட பெற்றோரும், உறவினர்களும், மணமகளும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
ஆயிரம் கனவுகளுடன் திருமண பந்தத்தை தொடங்கிய சிறிது நேரத்திலேயே தனது வாழ்க்கைத் துணையை இழந்ததை எண்ணி, மணமகள் கதறி துடித்தார். அது காண்போரின் கண்களை குளமாக்கியது.
தன் வாழ்க்கை இனி என்னவாகுமோ, ஏதாகுமோ என்று அவர் கூறியபடி கதறி அழுததும், அவரைப் பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுததும் திருமண மண்டபத்தில் கூடியிருந்த அனைவரையும் கண்கலங்க செய்தது.
மணமகளையும், அவரது குடும்பத்தினரையும் சமாதானம் செய்ய அவர்களுடைய உறவினர்கள் முயன்றனர். ஆனால் அவர் சமாதானம் அடையவில்லை. திருமண வீட்டில் பரபரப்பும், சோகமும் ஏற்பட்டது.
பிரவீனை இழந்த அவரது குடும்பத்தினரும் கதறி அழுதனர். வாழ வேண்டிய இளம் வயதில் தங்களை பரிதவிக்க விட்டு சென்று விட்டானே எனக்கூறி அவரது பெற்றோரும், குடும்பத்தினரும் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.















