தீபாவளிக்கு பசங்களுக்கு டிரஸ் எடுக்கணும் வாங்க… கணவனை வரவழைத்து போட்டுத்தள்ளிய மனைவி!!

249

அரியலூர்….

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே வெண்மான்கொண்டான் கிராமத்திற்கு செல்லும் சாலையில் வனத்துறைக்கு சொந்தமான கள்ளங்காடு என்ற முந்திரிக்காடு உள்ளது. இந்த முந்திரிக்காட்டில் கடந்த 30ம் தேதி அதிகாலை மனித உடல் ஒன்று எரிந்து கொண்டிருந்ததை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீயை அணைத்து உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கொலை செய்யப்பட்டது வடகடல் கிராமத்தை சேர்ந்த சுரேஷ்(43) என்பதும் தெரியவந்தது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். சந்தேகத்தின் பேரில் மனைவியிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இறுதியில் போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.


இதுபற்றி போலீசார் கூறுகையில்;- வடகடல் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூ கட்டும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி அனுப்பிரியா(30). அனுப்பிரியாவிற்கும் அதே பகுதியை சேர்ந்த அவரது சித்தப்பா மகன் வேல்முருகன் (33) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த சுரேஷை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டனர்.

அதன்படி தீபாவளி பண்டிகைக்காக குழந்தைகளுக்கு புத்தாடை எடுத்து கொடுக்க வாருங்கள் என்று கடந்த 29ம் தேதி கணவர் சுரேஷை அனுப்பிரியா வரவழைத்தார். பின்னர், இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த போது அரசுக்கு சொந்தமான முந்திரி தோப்பு அருகே சென்றபோது மயக்கம் வருவதாக கூறி நடித்து வண்டியை நிறுத்துமாறு அனுப்பிரியா கூறினார்.

இதையடுத்து இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சுரேஷ் கீழே இறங்கி போது அங்கு மறைந்திருந்த வேல்முருகன் மனைவி கண்ணெதிரே அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். பின்னர் வெண்மான்கொண்டான் முந்திரி காட்டில் சாக்கில் சுரேஷ் உடலை கட்டி பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இதையடுத்து வேல்முருகன், அனுப்பிரியா ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி  வருகின்றனர்.