நீச்சல் சொல்லித் தருகையில் தந்தையும் மகனும் நீரில் மூழ்கி பரிதாபமாக மரணம்!!

245

மதுரை சோழவந்தான் அருகே கீழமட்டையான் கண்மாயில் குளிக்கச் சென்ற தந்தையும், மகனும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மதுரை சோழவந்தான் அருகே மேலமட்டையான் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகர் (36). இவரது மனைவி இந்துமதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

கீழமட்டையான் கிராமத்தில் பொங்கல் திருவிழா நடந்து வரும் நிலையில், தனது 4 வயது மகன் ஜெகதீஸ்வரனை அழைத்துக் கொண்டு சென்றார் அழகர். அப்போது அங்குள்ள கண்மாயில் குளிக்கச் சென்ற அழகர், மகனுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்துள்ளார்.

மதுரை முழுவதும் பல பகுதிகளிலும் வெள்ளம் தேங்கி நிற்கும் நிலையில், தொடர் மழையால் கண்மாய் முழுவதும் நீர் நிரம்பியிருந்துள்ளது.

அதன் காரணமாக ஆழம் தெரியாமல் கண்மாயில் இறங்கிய அழகரும் அவரது நான்கு வயது மகன் ஜெகதீஸ்வரனும் நீரில் மூழ்கி மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதற்கிடையே திருவிழாவுக்குச் சென்ற கணவனும், மகனும் வீடு திரும்பாததால் அழகரின் மனைவி இந்துமதியும் அவரது உறவினர்களும் பல்வேறு இடங்களில் இருவரையும் தேடிப் பார்த்தனர்.


இந்நிலையில் கண்மாயில் தந்தையும், மகனும் சடலமாக மிதந்ததைப் பார்த்து விட்டு கிராமத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவர்கள் காடுபட்டி காவல் நிலைய போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காடுபட்டி போலீசார் இருவரது சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அழகரின் மனைவி இந்துமதி அளித்த புகாரின் பேரில் காடுபட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.