பெங்களூருவில் பசவேஸ்வர் நகரில் ஸ்பீக்கர் மூலம் மொபைலில் பேசத் தொடங்கி வாக்குவாதம் ஏற்பட்டது. கொடூர கொலையில் முடிந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு மகாகணபதி நகரில் வசித்து வந்த நமீதா சாஹுவை அவரது கணவர் லோகேஷ் குமார் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தானில் வசித்து வருபவர் லோகேஷ், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நமீதாவை திருமணம் செய்து கொண்டு பெங்களூரில் புகைப்பட ஸ்டூடியோ நடத்தி வந்தார். இவர்களுக்கு 3 வயதில் மகள் உள்ளார்.
ஏப்ரல் 24 அன்று மாலை, நமீதா தனது சகோதரருடன் பேசிக் கொண்டிருந்த போது, ஸ்பீக்கர் போட்டு பேசும்படி லோகேஷ் கூறியுள்ளார். செல்போன் ஸ்பீக்கரை ஆன் செய்ய மறுத்ததற்காக ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்தது.
இது குறித்து வீட்டு உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் பசவேஸ்வர் நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணையில், லோகேஷ் தனது மனைவியை அடித்து, கழுத்தை நெரித்து கொன்றது உறுதி செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். குடும்பப்பிரச்சனை காரணமாக கடந்த சில வாரங்களாக இருவரும் அடிக்கடி சண்டையிட்டது தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் மகாகணபதி நகர் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.