
சமீப காலங்களாக நாடு முழுவதும் வரதட்சணை சம்பவங்களில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. ரூ.43 லட்சம் வரதட்சணையாக கொடுத்தும் பேராசைத் தீராமல் மேலும் பணம் கேட்டு கொடுமைப்படுத்தியதால் இளம்பெண் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெங்களூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு பனசங்கரி பகுதியைச் சேர்ந்த குருபிரசாத் – கீர்த்தி தம்பதிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணத்தின் போது கீர்த்தியின் பெற்றோர் சுமார் 35 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் சொந்த வீடு கட்ட பணம் வேண்டும் என கணவர் குருபிரசாத், மனைவியை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.
ஏற்கனவே அதிக செலவு செய்துள்ளதால் மேலும் பணம் கேட்க முடியாது என கீர்த்தி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவர், கடந்த இரண்டு மாதங்களாக வரதட்சணை கேட்டு அவரை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. மகளின் நிலை கண்டு வருந்திய பெற்றோர் கடந்த டிசம்பரில் 8 லட்சம் ரூபாயை கடனாக பெற்று கொடுத்துள்ளனர்.
இருப்பினும் மீண்டும் கூடுதல் பணம் கேட்டு கீர்த்தியை அடித்து கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த கீர்த்தி கடந்த 24-ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக பனசங்கரி போலீசார் குருபிரசாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.















