சென்னை…

சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியிடம் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அவரது தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து, அந்த சிறுமியை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, எனக்கு எந்தவித பாலியல் தொல்லை நடக்கவில்லை. என் தாய்க்கும் அந்த வாலிபருக்கும் முன் விரோதம் இருந்தது.

அவரை பழிவாங்குவதற்காக பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக என் தாய் பொய் புகார் அளித்ததாக சிறுமி அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். இதையடுத்து போலீசார், சிறுமியின் தாயை எச்சரித்து அனுப்பினர்.

அதனைத் தொடர்ந்து, உண்மையை கூறிய சிறுமிக்கு, அவரது தாயால் பாதிப்பு ஏற்படும் என்பதால், சிறுமியை மீட்டு அரசு காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.

இதனிடையே, சிறுமி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பொய் புகாரில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.















