அரசு வேலை கிடைத்ததும் கடத்தல்.. துப்பாக்கி முனையில் மகளுடன் திருமணம் நடத்தி வைத்த தொழிலதிபர்.. காரணம் என்ன?

245

பீகாரில்..

பீகார் மாநிலம் வைஷாலி கிராமத்தை சேர்ந்தவர் கௌதம் குமார். இவர் அண்மையில் அரசு பணியாளர்கள் ஆணையர் தேர்வை எழுதி முடிவுக்காக காத்திருந்தார். அதன்படி அண்மையில் வெளியான முடிவில் இவர் சிறந்த மதிப்பில் தேர்ச்சி பெற்று, ஆசிரியர் பணியை பெற்றார். இவர் தற்போது உத்க்ரமித் மத்திய வித்தியாலயா என்ற பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த சூழலில் இவர் சம்பவத்தன்று கடத்தப்பட்டுள்ளார். இவரது பள்ளிக்கு வந்த 4 – 5 பேர் கொண்ட கும்பல் இவரை பள்ளிக்கே நேரடியாக வந்து கடத்தி சென்றுள்ளனர். அவ்வாறு சென்ற அவர்கள் ஒரு இடத்தில் கொண்டு போய் நிறுத்தி அவரை வலுக்கட்டாயமாக செங்கல் சூளை தொழிலதிபர் ராஜேஷ் ராய் என்பவரது இளம் மகளை திருமணம் செய்யும்படி வற்புறுத்தியுள்ளனர்.

இதற்கு கௌதம் குமார் மறுப்பு தெரிவித்த காரணத்தினால், அவர் அந்த கும்பலால் சரமாரியாக தாக்கப்பட்டார். மேலும் துப்பாக்கியை காட்டி மிரட்டி அவரை தாலி கட்ட வற்புறுத்தியுள்ளனர். இதனால் வேறு வழியின்றி கௌதம் குமார், அந்த இளம்பெண் கழுத்தில் தாலி கட்டியுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து அறிந்த இளைஞரின் குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுப்பட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


தொடர்ந்து இதுகுறித்து போலீசிலும் வழக்கு தொடர்ந்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துப்பாக்கி முனையில் ஆசிரியர் ஒருவர் கடத்தப்பட்டு திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இதுபோன்ற சம்பவம் பிகாரில் அடிக்கடி நடக்கும் ஒன்றாக இருக்கிறது.

‘பகட்வா விவாஹா’ (Pakadwa Vivah) அல்லது ‘ஜாப்ரிய விவாஹா’ (Jabariya Vivah) என்று சொல்லப்படும் இந்த திருமணமானது, நன்கு படித்த, வசதி படைத்த இளைஞரை கடத்தி, திருமணம் செய்து வைக்கும் கடத்தல் திருமணமாகும். பொதுவாக வட மாநிலங்களான பீகார், உத்தர பிரதேசம், ஜார்கண்ட் போன்ற சில பகுதிகளில், இது போன்று மணமகன் கடத்தல் அல்லது கட்டாய திருமணம் அடிக்கடி நடக்கும்.

அதாவது திருமணம் ஆகாத, வசதியுள்ள இளைஞரை கடத்தி, அவரை துப்பாக்கி, கத்தி முனையில் மிரட்டி, தங்கள் வீட்டு பெண்ணை திருமணம் செய்ய கட்டாயப்படுத்தி தாலி கட்ட வைக்கப்படுகிறார்கள். இதனை ‘ஜாப்ரிய விவாஹா’ என்று அழைக்கின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, பீகாரில் பொகாரோ ஸ்டீல் ஆலையில் ஜூனியர் மேனேஜராக பணிபுரிந்து வந்த 29 வயதான வினோத் குமார் என்பவர், பாட்னாவில் உள்ள பண்டாரக் பகுதியில் கடத்தப்பட்டு கடுமையாகத் தாக்கி திருமணம் செய்து வைக்கபட்டார். குமார் மணமகன் உடையில் சடங்குகளை நிறுத்துமாறு கெஞ்சும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.

அதோடு கடந்த ஆண்டு ஜூன் மாதம் இதே பீகாரில் மருத்துவர் ஒருவரை கடத்தி கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டு எடுக்கப்பட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கபட்டவர்கள் சிலர் தங்களுக்கு விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.

நவாடா பகுதியை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவருக்கும், லக்கிசராய் என்ற பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் இடையே நடந்த பத்து வருட கட்டாயத் திருமணத்தை பாட்னா உயர் நீதிமன்றம் ரத்து செய்தது என்பது கூடுதல் தகவல்.

கடந்த 2021-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘அத்ராங்கி ரே’ (Atrangi Re) திரைப்படம் தமிழில் ‘கலாட்டா கல்யாணம்’ என்ற பெயரில் வெளியானது. அந்த திரைப்படத்தில் தனுஷ் பீகார் சென்றிருந்தபோது, அவரை கடத்தி கதாநாயகியின் கழுத்தில் கட்டாய தாலி கட்ட வைத்து, கதாநாயகியை தனுஷுடன் அனுப்பி வைக்கப்படும் காட்சி காட்டப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.