அவளோடு சேர்த்து, என்னையும் புதைச்சுடுங்க.. அக்கா மகளைக் கொன்ற தாய்மாமன் தற்கொலை : நடந்தது என்ன?

354

திருப்பத்தூரில்..

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகேயுள்ள கே.பந்தாரப்பள்ளி பனந்தோப்புப் பகுதியைச் சேர்ந்த 18 வயதான கல்லூரி மாணவியை, அவரின் சொந்தத் தாய்மாமன் சரண்ராஜ் என்பவரே ஒருதலையாகக் காதலித்துவந்தார்.

சரண்ராஜுக்கு 35 வயதாகிறது. அவர் புகைப்படக் கலைஞராகவும், ஓட்டுநராகவும் வேலை செய்துவந்தார். தன்னைவிட 17 வயது குறைவான, அக்கா மகளைத் திருமணம் செய்துகொள்ள விரும்பிய சரண்ராஜ், தன் அக்காவிடம் சென்று திருமணம் குறித்து அடிக்கடி தொல்லை கொடுத்துவந்தார்.

ஆனால், சரண்ராஜ் ஏற்கெனவே ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவர் எனக் கூறப்படுவதாலும், வயது வித்தியாசம் அதிகமிருந்த காரணத்தாலும் ‘மகளைத் திருமணம் செய்து கொடுக்க முடியாது’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டாராம் அவரின் அக்கா.


இதனால், ஆத்திரமடைந்த சரண்ராஜ், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த அக்காள் மகளைக் கழுத்தறுத்துக் கொன்றுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து, வழக்கு பதிவுசெய்த நாட்றம்பள்ளி போலீஸார், தப்பி ஓடிய சரண்ராஜைத் தீவிரமாகத் தேடியபோது, நேற்று காலை டீக்கடை ஒன்றில் அவர் பிடிபட்டார்.

அப்போது, அவர் விஷம் குடித்துவிட்டதாகச் சொன்னதால், நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக போலீஸாரின் பாதுகாப்பிலேயே கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சரண்ராஜ், நேற்று இரவு இறந்துவிட்டார். இது தொடர்பாக, நாட்றம்பள்ளி போலீஸார் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். இதற்கிடையே, ‘நானும் தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன்.

என் கடைசி ஆசை, அவள் உடலோடு சேர்த்து, என்னையும் புதைத்துவிடுங்கள்’ என்று உறவினர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, சரண்ராஜ் வெளியிட்டிருந்த வீடியோவும், சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவருகிறது.