ஆண் நண்பர்களுடனான நட்பு.. கைவிட மறுத்த மனைவி.. தாய்மாமாவுடன் இணைந்து கொலை செய்த கணவன்!!

59

தூத்துக்குடியில் ஆண் நண்பர்களுடன் நட்பை கைவிட மறுத்த மனைவியை கணவன், தன் மனைவியின் தாய்மாமாவுடன் இணைந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள முத்தலாபுரத்தை சோ்ந்தவா் பாலமுருகன். சிங்கப்பூரில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சந்தனமாரியம்மாள். பாலமுருகன், சிங்கப்பூரில் சம்பாதித்த பணத்தை தனது மனைவியின் வங்கிக்கணக்கிற்கு மாதந்தோறும் அனுப்பி வந்துள்ளார்.

அந்தப் பணத்தில் தூத்துக்குடி கிருபை நகரில் சந்தன மாரியம்மாள் தன் பெயரில் புதிதாக வீடு வாங்கி உள்ளாராம். இந்த நிலையில் வெளிநாட்டு வேலையை விட்டுவிட்டு கடந்த ஓராண்டுக்கு முன்னர் பாலமுருகன் சொந்த ஊா் திரும்பியுள்ளார்.

இதைத் தொடா்ந்து வெளிநாட்டில் வேலை பார்த்து தான் அனுப்பிய பணம், நகைகள் குறித்து மனைவியிடம் கேட்டாராம். அதற்கு சந்தன மாரியம்மாள் சரியான பதிலளிக்கவில்லை என சொல்லப்படுகிறது.

மேலும் சந்தன மாரியம்மாளுக்கு சமூக வலைதளங்களில் பல்வேறு ஆண் நண்பருடன் நட்பு இருந்ததும் தெரிய வந்தது. அத்துடன் அவரின் செல்போனில் பல ஆண் நண்பர்களின் எண்கள் இருந்துள்ளன. வாட்ஸ் அப் சேட்டிங்கையும் பாலமுருகன் பார்த்துள்ளார்.

இதன் காரணமாக தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடந்த 6 மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். மேலும், சந்தனமாரியம்மாள் ஏற்கனவே தனது தாய் மாமன் காளிமுத்து என்பவரிடமும் வீடு வாங்கிட பணம் தேவைப்படுவதாகச் சொல்லி நகைகளை வாங்கி ஏமாற்றியதாகச் சொல்லப்படுகிறது.


இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பும் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சந்தனமாரியம்மாளின் தாய்மாமாவும் தான் கொடுத்த நகைகள் குறித்து கேட்டுள்ளார்.

இந்த நிலையில், சந்தனமாரியம்மாள், கிருபை நகரில் இருந்து தனது இரண்டு சக்கர வாகனத்தில் கணேஷ் நகா் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த கணவர் பாலமுருகன் மற்றும் தாய்மாமா காளிமுத்து ஆகியோர் சந்தன மாரியம்மாளை வழிமறித்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.

இதில் பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்தார். பின்னர் இருவரும் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். ”நான் வெளிநாட்டில் இருந்தபோது என் மனைவிக்கு பல ஆண் நண்பர்களுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

நான் சம்பாதித்து அனுப்பியை பணத்தை தேவையில்லாமலும், ஆடம்பரமாகவும் செலவு செய்துள்ளார். ஆண் நண்பர்களின் நட்பை கைவிடும்படி கூறியதால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நாங்கள் பிரிந்து வாழ்தோம்.

இருப்பினும் அவர் ஆண் நண்பர்களுடனான நட்பை கைவிடவில்லை. பல முறை சொல்லியும் கேட்காததால் கொலை செய்ய திட்டமிட்டேன். அவளது தாய்மாமாவிடம் நகைகளை வாங்கிவிட்டு ஏமாற்றியதால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது அதனால் கொலை செய்ய அவரும் உதவினார்” எனக் கூறி போலீஸாரை அதிர வைத்தார் பாலமுருகன்.