சேலத்தில்..

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள எம் செட்டியப்பட்டி பகுதியை சேர்ந்த தனியார் நிதி நிறுவன உரிமையாளர் மூர்த்தி (30). இவர் இளம் பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு மூலம் அறிமுகமாகி தன்னை திருமணம் செய்து கொண்டு மூன்றே மாதத்தில் தன்னை ஏமாற்றி 1.5 லட்சம் பணம் மற்றும் ஐந்து சவரன் நகை பறித்துச் சென்றுவிட்டதாக தொளசம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஓமலூர் அருகே எம் செட்டியப்பட்டி பகுதியை சேர்ந்த தனியார் நிதி நிறுவனர் மூர்த்திக்கு இன்ஸ்டாகிராமில் ரசிதா என்ற பெண் அவரது ஐடியில் இருந்து குறும் தகவல்கள் வந்துள்ளது. இதனையடுத்து மூர்த்தி அந்த பெண்ணிடம் நட்பாக பழகியுள்ளார்.

பின்னர் இருவரும் தனிமையில் சந்தித்து பேச தொடங்கியுள்ளனர். அப்போது ஒருவரை ஒருவர் காதலித்து மார்ச் மாதம் 30ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். திருமணமான சில நாட்களிலேயே மூர்த்திக்கும், ரசிதாவிற்கும் இடையே பல கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ரசிதா கடந்த 4ஆம் தேதி ஓமலூர் அருகே உள்ள எம் செட்டியப்பட்டியில் உள்ள மூர்த்தி வீட்டில் இருந்து மாயமானதாகவும்,

காலையில் வீட்டில் தேடிப் பார்த்த போது 1.5 லட்சம் பணம் மற்றும் 5 சவரன் நகையும் மாயமாக இருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து விசாரித்தபோது ரஷீதா நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும்,
அவர் இதற்கு முன்னர் கேரளா,கர்நாடக,ஆந்திரா மாநிலங்களில் உள்ள 8 பேரை திருமணம் செய்து நகை மற்றும் பணத்தை திருடி சென்றுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரசிதா மீது கோவை மாவட்ட துடியலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது. அவரது சமூக வலைதள கணக்குகளை ஆராய்ந்த போது பல ஆண்களை இந்த பெண் ஏமாற்றி பணம் பறித்தது தெரியவந்துள்ளது.
அதிலும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் கார், பைக் போன்ற சொகுசு வாகனங்களுடன் பதிவு செய்யும் இளசுகளை குறி வைத்து இது போன்ற மோசடி சம்பவங்களை அரங்கேற்றியுள்ளார்.

போலிக் கணக்குகள் மூலம் பல ஆண்களைத் தனது வலையில் சிக்க வைத்து அவர்களுடன் நட்பாகப் பேசுவது போல் தொடங்குவார். பின்னர் ஆபாசமாக சாட்டிங் செய்தும், கவர்ச்சியான புகைப்படங்களை அனுப்பியும் மயக்கியுள்ளார்.
தொடர்ந்து, அந்த உரையாடல்களை வைத்துக்கொண்டு அவர்களை மிரட்டி பணம் பறிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ஆபாச சாட்டிங் செய்து 8 ஆண்களை திருமணம் செய்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.















