இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு.. இளம்பெண் சரமாரி வெட்டிக்கொலை.. கணவன், உறவினர் போலீசில் சரண்!!

80

தூத்துக்குடி:தூத்துக்குடி இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பில் இருந்த நிலையிலும், வெளிநாட்டில் வேலை பார்த்து அனுப்பிய பணம், நகைகளை திருப்பித் தராமல் ஏமாற்றிய மனைவியை உறவினருடன் சேர்ந்து கணவரே கொடூரமாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள முத்தலாபுரம் கோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் சிங்கப்பூரில் எலக்ட்ரிசியன் வேலை பார்த்து வந்துள்ளார். பி.காம் பட்டதாரியான இவருக்கும், தூத்துக்குடியைச் சேர்ந்த எம்ஏ, பிஎட் பட்டதாரியான சந்தன மாரியம்மாள்(32) என்பவருக்கும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.

திருமணம் முடிந்ததை தொடர்ந்து பாலமுருகன், மனைவியை சிங்கப்பூருக்கு அழைத்து சென்றார். இந்நிலையில் ஆறு மாதங்களுக்குப் பின்பு மீண்டும் சிங்கப்பூரிலிருந்து வந்த சந்தன மாரியம்மாள் தூத்துக்குடியில் வசிக்க துவங்கியுள்ளார்.

பாலமுருகன் சிங்கப்பூரில் வேலை பார்த்து ரூ.10 லட்சம் அனுப்பி வைத்துள்ளார். மேலும் 50 பவுன் நகையும் செய்து கொடுத்துள்ளார். அந்த பணத்தில் கடந்த 2018ம் ஆண்டு தூத்துக்குடி கிருபை நகரில் சந்தன மாரியம்மாள் தனது பெயரில் ஒரு இடத்தை வாங்கி, அதில் வீடு கட்டி குடியிருந்து வந்துள்ளார்.

இவர்களுக்கு 5வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. இதற்கிடையில் சந்தன மாரியம்மாள் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு பல ஆண் நண்பர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பாலமுருகன் வெளிநாட்டு வேலையை விட்டுவிட்டு சொந்த ஊர் திரும்பியுள்ளார். அவருக்கு உடல் நிலை சரியில்லாததால் மருத்துவச் செலவுக்கு பணம் தேவைப்பட்டதால், வெளிநாட்டில் இருந்து அனுப்பிய பணம், நகைகளை என்ன செய்தாய் என கேட்டுள்ளார். அதற்கு சந்தன மாரியம்மாள் உரிய பதிலளிக்காமல் நகை, பணத்தையும் தர மறுத்துள்ளார்.


மேலும் சந்தன மாரியம்மாள் இன்ஸ்டாகிராமில் பல ஆண் நண்பர்களுடன் தொடர்பில் இருந்ததை அறிந்த பாலமுருகன், மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தார்.

சந்தன மாரியம்மாள் ஏற்கனவே தனது தாய் மாமாவான காளிமுத்து என்பவரிடமும் இதேபோன்று நகைகளை வாங்கி ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது சந்தனமாரியம்மாளின் தம்பி, தாய்மாமா காளிமுத்துவை அரிவாளால் வெட்டிய வழக்கு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் கிருபை நகரில் இருந்து மொபட்டில் வந்த சந்தன மாரியம்மாளை, கணேஷ்நகர் பகுதி சுகாதார நிலையம் அருகே மறைந்திருந்த பாலமுருகன், காளிமுத்து ஆகியோர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் வெட்டி கொடூரமாக கொலை செய்தனர்.

இதையடுத்து இருவரும் தூத்துக்குடி தென்பாகம் போலீசில் சரணடைந்தனர். மனைவியை வெட்டும் போது பாலமுருகனுக்கு கையில் காயம் ஏற்பட்டதால் போலீசார் அவரை தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.