இறந்துபோன தந்தையின் சட்டைகளை கொண்டு மகள் செய்த செயல் : நெட்டிசன்களை உருகவைத்த வீடியோ!!

403

நிகிதா..

நம் அன்புக்கு உரியவர்கள் நம்மை விட்டு பிரியும் வேளையில் உருவாகும் வெற்றிடங்கள் சில நேரங்களில் நிரப்பப்படாமலேயே போவதுண்டு. ஆண்டுக்கு கணக்கில் நம்முடைய வாழ்க்கையை அவர்களுடையதாக கருதி நம் மீது பாசத்தை பொழிந்தவர்களின் மரணம், நம்மை நிலைகுலைய செய்துவிடும்.

அந்த வகையில் நம்முடைய சிறிய சிறிய வெற்றிகளை கொண்டாடும் தந்தையோ தாயோ நம்மை பிரிந்துவிட்டால், அது ஏற்படுத்தும் தாக்கம் அதீதமாக இருக்கும். அவர்களது சிறிய சிறிய பொருட்களை கூட நாம் பத்திரப்படுத்த துவங்குவோம். தூக்கிவீசப்பட்ட ஒரு கைக்குட்டையை வாழ்வின் பொக்கிஷமாக நினைக்க துவங்குவோம். இதே சிக்கலை சில வருடங்களுக்கு முன்னர் சந்தித்திருக்கிறார் நிகிதா கினி என்னும் இளம்பெண்.

நிகிதாவின் தந்தை சில வருடங்களுக்கு முன்னர் மரணமடைந்திருக்கிறார். இதனால் பெரும் சோகத்தில் மூழ்கிய நிகிதா, அவரது பிரிவை எதிர்கொள்ள முடியாமல் தவித்துவந்திருக்கிறார். இந்நிலையில் தனது அப்பாவின் விலையுயர்ந்த சட்டைகளை வீட்டில் கண்டறிந்த நிகிதா அதன்மூலம் ஒரு போர்வையை உருவாக்க முயற்சித்திருக்கிறார். எப்போதும் தனது அப்பா தன்னுடன் இருக்கும் வகையில் இந்த திட்டத்தை கையில் எடுத்ததாக கூறுகிறார் அவர்.


இதனையடுத்து உள்ளூர் கடை ஒன்றில் அப்பாவின் சட்டைகளை கொண்டு தனக்கு ஒரு போர்வை செய்து தரமுடியுமா? என கேட்டிருக்கிறார் நிகிதா. அந்த ஊழியர்களும் ஓகே சொல்லவே, சட்டைகளை அனுப்பியுள்ளார் அவர்.

அந்த சட்டைகளை கொண்டு இரண்டு போர்வைகளை அந்த ஊழியர்கள் வடிவமைத்து கொடுத்திருக்கிறார்கள். இந்த பார்சல் நிகிதாவுக்கு மார்ச் 8, 2021 ஆம் தேதி கிடைத்திருக்கிறது. அது நிகிதாவின் அப்பாவுடைய பிறந்த தினம். இந்த எதேச்சையான சம்பவம் தன்னை மிகவும் பாதித்துவிட்டதாகவும் இந்த போர்வை எப்போதும் தனது அப்பா தனக்கு அருகில் இருக்கும் அனுபவத்தை கொடுக்கும் என்கிறார் நிகிதா.

இதனை வீடியோவாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கிறார். அதில்,” இந்த வீடியோவை முடிக்க எனக்கு இரண்டு வருடங்கள் பிடித்தன. எனக்கும் எனது சகோதரருக்கும் அழகான போர்வை கிடைத்திருக்கிறது. அதில் என்னுடைய அப்பாவின் மிக அழகான தோற்றத்தை நாங்கள் காண்கிறோம். தந்தையை இழந்த அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்.

அவர் உங்கள் பக்கம் ஒருபோதும் விலகமாட்டார் என்பது உங்களுக்குத் தெரியும் என்று நம்புகிறேன். அவர் உங்களைச் சுற்றி இல்லாத ஒரு நாளுக்கு உங்களைத் தயார்படுத்துவதே உங்கள் வாழ்க்கையில் அவர் இருப்பதன் முழு காரணமாக இருந்திருக்கும்.

அந்த நேரத்தில் உங்கள் பலத்தை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். மெல்ல மெல்ல அவரால் விதைக்கப்பட்டவை அனைத்தும் உங்களின் முன்பு விரிந்து உங்களையே உங்களுக்கு காட்டும்” என உருக்கத்துடன் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வீடியோவை பார்த்த பிரபல நடிகை சாரா ஜேன் டயஸ்,” இது என்னை உருக வைத்துவிட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை இதுவரையில் பல லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

 

View this post on Instagram