சென்னையில்..

சென்னை அம்பத்தூர் சண்முகபுரம் நேதாஜி நகரை சேர்ந்தவர் மேக்ஸ்வெல் (55). ஆட்டோ ஓட்டுநர். கடந்த 9ம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மேக்ஸ்வெல்லை 5 பேர் கொண்ட வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்து அங்கிருந்து தப்பித்தனர். வெளியே சென்ற மனைவி வீட்டுக்கு வந்து பார்த்த போது கணவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சிடைந்தார்.

உடனே இந்த சம்பவம் தொடர்பாக தனது மகன்களுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மேக்ஸ்வெல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். முற்கட்ட விசாரணையில் 2022-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த உதயகுமார் (30) கொலைக்கு பழிக்கு பழியாக இந்த கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, உதயகுமாரின் தாய் லதா (49) மற்றும் அவரது கூட்டாளிகளான கார்த்திக் (24), வினோத் (24), யுவராஜ் (28), நாகராஜ் (62) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். தனது மகன் உதயகுமாரின் கொலைக்காக தாய் லதா இந்த கொலையை அரங்கேற்றியது குறிப்பிடத்தக்கது.















