கனடாவில் வாழ ஆசையுடன் தந்தையை அழைத்துச் சென்ற இந்திய வம்சாவளி பெண்.. விமானத்தில் நடந்த பயங்கரம்!!

95

கனடாவில்..

நீண்ட கால காத்திருப்புக்குப் பின் நிரந்தர அனுமதி பெற்ற தனது தந்தையை, கனடாவுக்கு தன்னுடன் வாழ்வதற்காக ஆசையாக விமானத்தில் அழைத்துச் சென்றார் இந்திய வம்சாவளியினரான பெண் ஒருவர். ஆனால், அவரது ஆசை நிராசையாகிவிட்டது…

ஒன்ராறியோவில் வாழ்ந்துவரும் இந்திய வம்சாவளிப் பெண்ணான ஷானு (Shanu Pande), இந்தியாவிலிருக்கும் தன் தந்தையான ஹரீஷை (Harish Pant, 83) தன்னுடன் வாழ்வதற்காக கனடாவுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்ததைத் தொடர்ந்து, ஏர் கனடா விமானம் ஒன்றில் இருவருமாக புறப்பட்டுள்ளார்கள். விமானம் புறப்பட்டு ஏழு மணி நேரம் கடந்த நிலையில், திடீரென ஹரீஷுக்கு நெஞ்சு வலி, முதுகு வலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் டெல்லியிலிருந்து, கனடாவிலுள்ள மொன்றியலுக்குச் செல்ல, 17 மணி நேரம் விமானத்தில் பயணிக்கவேண்டும். ஆகவே, கனடா செல்ல இன்னும் சுமார் 10 மணி நேரம் உள்ளதால், உடனே, தன் தந்தையை மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கவேண்டும் என்றும், அதனால், விமானத்தை இந்தியாவுக்குத் திருப்புமாறும் விமானப் பணியாளர்களிடம் கெஞ்சியுள்ளார் ஷானு.


ஆனால், அவர்கள் ஷானுவின் கோரிக்கையை ஏற்கவில்லை. விமானம் தொடர்ந்து ஒன்பது மணி நேரம் பறக்க, தன் கண் முன்னாலேயே கொஞ்சம் கொஞ்சமாக தன் தந்தையின் உயிர் பிரிந்துகொண்டே வந்ததாகக் கூறுகிறார் ஷானு. மொன்றியல் வந்ததும், அங்கு தயாராக இருந்த மருத்துவ உதவிக்குழுவினர் ஹரீஷுக்கு சிகிச்சையளிக்க, சிகிச்சையின்போதே அவரது உயிர் பிரிந்துள்ளது.

பல ஆண்டுகளாக தன் தந்தையை தன்னுடன் கனடாவுக்கு அழைத்துக்கொள்ள ஆசையுடன் காத்திருந்ததாக தெரிவிக்கும் ஷானு, தன் தந்தையின் நோய் அறிகுறிகளை ஆபத்தானவை என ஏர் கனடா ஊழியர்கள் அங்கீகரிக்க மறுத்ததாலேயே அவரது உயிர் பிரிந்திருக்கக்கூடும் என குற்றம் சாட்டியுள்ளார். விமானியும் ஏர் கனடா பணியாளர்களும் நினைத்திருந்தால் தன் தந்தையைக் காப்பாற்றியிருக்கக்கூடும் என்று கூறும் ஷானு, ஆனால், அவர்களோ, மனிதத்தன்மையில்லாமல், இரக்கமில்லாமல் நடந்துகொண்டதாகக் கூறுகிறார்.

ஆனால், ஹரீஷின் மரணத்துக்குத் தாங்கள் காரணம் என கூறப்படுவதை நிராகரித்துள்ள ஏர் கனடா நிறுவனமோ, தங்கள் பணியாளர்கள் விமானத்தில் முறைப்படி மேற்கொள்ளவேண்டிய நடைமுறைகளை சரியாக பின்பற்றியதாக தெரிவித்துள்ளது.அப்படி என்ன நடைமுறைகள் பின்பற்றப்பட்டன என்று கேட்டால், அதற்கு விளக்கமளிக்க ஏர் கனடா நிறுவன செய்தித்தொடர்பாளரான Peter Fitzpatrick மறுத்துவிட்டார்.