
கரூர் மாவட்டம் தெற்கு காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் ரித்திக் (வயது 23). ஐடி நிறுவன ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
4 மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், சமீபத்தில் தனது வீட்டில் துப்பட்டாவை பயன்படுத்தி மனைவியுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக துப்பட்டா ரித்திக்கின் கழுத்தை இறுக்கியது. இதனால், அவர் மயக்கமடைந்து கீழே விழுந்தார்.
இதைக் கண்ட அவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், ரித்திக் மீட்கப்பட்டு, காந்தி கிராமத்தில் உள்ள கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
தீவிர சிகிச்சையில் இருந்த ரித்திக், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து, ரித்திக்கின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. சம்பவம் குறித்து தாந்தோணிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வீட்டில் மனைவியுடன் விளையாடும்போது துப்பட்டா கழுத்தில் சிக்கி புதுமணத் தம்பதி இறந்த சம்பவம் கரூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.















