
நாமக்கல் மாவட்டம் ஏ.எஸ்.பேட்டை பகுதியில் வசித்து வருபவர் தண்டபாணி. இவரது மகள் 21 வயது நந்தினி . இவர், திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
இவரும், தூரத்து உறவினருமான ராசிபுரம் அடுத்த கோனேரிப்பட்டி பகுதியில் வசித்து வரும் ஆறுமுகம் மகன் அஜய்யும் கடந்த 5 வருடமாக காதலித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் அஜய், நந்தினி வீட்டுக்கு நேரில் சென்று பெண் கேட்டார்.
அவர்கள் மறுத்து விட்ட நிலையில் பெற்றோரை மீறி இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர்.
நேற்று நந்தினி வழக்கம்போல் கல்லூரிக்கு புறப்பட்டு சென்ற நிலையில் தொலை பேசியில் அஜய்யை தொடர்பு கொண்டு தன்னை அழைத்து செல்லும்படியும், இல்லையெனில், தனக்கு வேறு திருமணம் செய்து வைத்து விடுவார்கள் எனவும் கூறி அழுதுள்ளார்.
உடனடியாக அஜய் ஒரு வாடகை காரில், உறவினர்கள் சிலரை அழைத்துக் கொண்டு நந்தினி கூறியபடியே மாலை நாமக்கல்-சேலம் சாலைக்கு சென்றார்.
வழக்கம்போல் கல்லூரி சென்று பேருந்தில் திரும்பி வரும் நந்தினியை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக அவரது தந்தையும் அங்கு காத்திருந்ததாக தெரிகிறது.
பேருந்தில் இருந்து இறங்கிய நந்தினியை காரில் ஏற்றி அழைத்துச் செல்ல அஜய் முயன்றார். அதனைக்கண்டு தண்டபாணி திடுக்கிட்டார். உடனே, காரை வழிமறித்து கூச்சலிட்டார்.
தகவலின்பேரில், அவரது உறவினர்களும் அந்த இடத்தில் திரண்டுவிட்டனர். காரில் அமர்ந்திருந்த காதல்ஜோடி செய்வதறியாமல் திகைத்தனர். நாம் பிரிந்து சென்று விட்டால், மீண்டும் ஒன்றுசேர முடியாது என முடிவெடுத்தது.
இனி என்னை கல்லூரிக்கு அனுப்ப மாட்டார்கள் உன்னை பார்க்கவும் முடியாது பேசவும் முடியாது ஏதாவது செய் என நந்தினி கெஞ்சியுள்ளார்.
இதனை கேட்டு மனம் உருகிய அஜய் தயாராக வைத்திருந்த தாலியை எடுத்து காருக்குள்ளேயே வைத்து நந்தினி கழுத்தில் கட்டிவிட்டர். தான் வைத்திருந்த மோதிரத்தையும் நந்தினிக்கு அணிவித்துள்ளார்.
இதைப்பார்த்த நந்தினியின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். காரின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். தகவலின்பேரில், நாமக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காதல் ஜோடியை மீட்டு பெற்றோரை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.















