கள்ளகாதலால் நடந்த விபரீதம் : சிசிடிவி வீடியோவால் சிக்கிய மனைவி!!

952

சென்னை..

தூத்துக்குடி மாவட்டம், நாகலாபுரத்தை சேர்ந்தவர் வினோதினி (எ) அனிதா.. இவருக்கு 26 வயதாகிறது.. இவர் அந்தோணி ஜெகன் என்பவரை காதலித்து வந்தார்.. அந்தோணிக்கு 24 வயதாகிறது.

விளாத்திகுளம் அருகே உள்ள குருவார்பட்டியை சேர்ந்தவர் அந்தோணி… இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், 2 பேர் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது..

எனவே, வினோதினிக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். கடந்த 2018 செப்டம்பர் 12ம் தேதி தூத்துக்குடியை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் கதிரவனுடன் திருமணம் நடந்தது. தம்பதி இருவரும் சென்னையில் வசித்து வந்தனர். ஆனால் வினோதினிக்கும் அந்தோணிக்குமான உறவு அப்போதும் தொடர்ந்தது.


கடந்த 2018 அக்டோபர் 12ம் தேதி, திருவான்மியூர் பீச்சுக்கு போக வேண்டும் என்று வினோதினி சொல்லவும், கதிரவன் அழைத்து வந்துள்ளார். அப்போது, பீச்சில், கண்ணாமூச்சி ஆடலாம் என்று அழைத்து, கதிரவனுக்கு கண்ணை கட்டிவிட்டுள்ளார். முன்னதாக, அங்கு ஏற்கனவே அந்தோணியை வரவழைத்திருந்தார் வினோதினி. தயாராக வைத்திருந்த அரிவாளாலேயே கதிரவனை சரமாரியாக வெட்டி சாய்த்தார் அந்தோணி.

தன் கழுத்தில் இருந்து தாலியை கழட்டி அந்தோணியிடம் தந்து, அவரை அங்கிருந்து தப்ப வைத்தார் வினோதினி. “திருடன் திருடன்” என்று கத்தி கூச்சல் போட்டு நாடகம் ஆடினார். இறுதியில் போலீசார் வந்து அங்கிருந்த சிசிடிவியை பார்த்ததும்தான், இவர்களின் கள்ளக்காதல் அம்பலமானது.

இந்த கள்ளஜோடி சேர்ந்தே கைதானார்கள். சேர்ந்தே புழலுக்கும் போனார்கள். 4 வருடத்துக்குமுன்பு இந்த கொலை சம்பவம், மீடியாக்களில் முக்கிய இடத்தை பிடித்தது. காரணம், புதுமணப்பெண் வினோதியின் வாக்குமூலம் அந்த அளவுக்கு அதிர்ச்சியை அப்போது தந்திருந்தது.

போலீசாரிடம் வினோதினி தன்னுடைய வாக்குமூலத்தில், “என்னைவிட 3 வயது குறைந்தவர் அந்தோணி. எங்கள் காதல் வீட்டுக்கு தெரிந்துவிட்டது. ஆனாலும், சில காரணங்களுக்காக இந்த காதலை என் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை.

அவசர அவசரமாக எனக்கு கதிரவனுடன் கல்யாணம் செய்து வைத்துவிட்டனர். நான் விதவையானால் கண்டிப்பாக அந்தோணியுடன் சேர்த்து வைத்துவிடுவார்கள் என்று நம்பினேன். அதனால்தான், கதிரவனை கொலை செய்ய பிளான் செய்தேன்” என்றார் வினோதினி.

முதலில் வழிப்பறி கேஸ் என்றுதான் இந்த வழக்கை திருவான்மியூர் போலீஸார் பதிவு செய்திருந்தனர். அதற்கு பிறகு, சிசிடிவி ஆய்வில் உண்மை தெரியவந்ததையடுத்துதான், அதை கொலை கேஸாக மாற்றி உள்ளனர்.

ஆரம்பத்தில், வினோதினி காலேஜ் போகும்போதெல்லாம் அந்த பஸ்ஸில் அந்தோணியும் வருவாராம். சில சமயம், பஸ்ஸில் இடம் இல்லாமல் நிற்கும்போது, வினோதினி அவருக்காக இடம் பிடித்தும் வைப்பாராம். இந்த பழக்கம்தான் இவர்களுக்குள் காதலாக மலர்ந்துள்ளது.

காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்து, கதிரவனை மாப்பிள்ளையாக்கி உள்ளனர். ஆனால், அனிதா, கதிரவனுடன் சேர்ந்து வாழாமலேயே இருந்துள்ளார். காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும் என்று அனிதாவின் பெற்றோரும் கருதியுள்ளனர்.

கதிரவனும் பொறுமையாகவே இருந்துள்ளார். திருமணம் முடிந்து ஒரு மாதத்துக்குப்பிறகுதான், கதிரவனிடம் மெல்ல பேச்சு தந்தாராம் வினோதினி. ஜாலியாக வெளியில் போலாமா? திருவான்மியூர் பீச்சுக்கு போலாமா? என்று அழைத்ததும், கதிரவனுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்திருக்கிறது. திருவான்மியூர் பீச்சில் தம்பதி இருவருமே உட்கார்ந்து மனம் விட்டு தனிமையில் பேசியிருக்கிறார்கள்.

திருமணம் ஆனதில் இருந்து, கதிரவனிடம் முகம் கொடுத்துகூட பேசாமல் இருந்த வினோதினி அன்றுதான், நிறைய நிறைய பேசினாராம். அதையெல்லாம் கேட்டு இனிமேல்தான், தனக்கு இல்லற வாழ்க்கை இனிக்க போகிறது ஏன்று கதிரவன் மனதில் மனக்கோட்டை கட்டியுள்ளார்.

இவர்கள் மனம்விட்டு பேசி முடித்ததுமே, “கண்ணாமூச்சி விளையாடலாமா” என்று வினோதினி கேட்டுள்ளார். கதிரவனும் சந்தோஷமாக சம்மதித்துள்ளார். கர்சிப்பை எடுத்து கதிரவனுக்கு கட்டி விட்டுள்ளார் வினோதினி. அதோடு சரி. கதிரவனின் கண்கள் அப்போதே முழுமையாக இருட்டிவிட்டது. அதற்கு பிறகு, அவரது இருண்ட உலகம் விடியவேயில்லை.