காதலனுடன் வெளியேறிய மகள்.. விரக்தியில் பெற்றோர் தற்கொலை!!

159

கேரள மாநிலத்தில், தன்னுடைய காதலனுடன் திருமணம் செய்து கொள்வதற்காக பெற்றோரின் எதிர்ப்பை மீறி, வீட்டை விட்டு மகள் வெளியேறியதால் விரக்தியில் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பவும்பா பகுதியைச் சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன்(55). இவரது மனைவி பிந்து (47). இந்த தம்பதியரின் மகள் கல்லூரியில் படித்து வரும் நிலையில், இளைஞரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு உன்னிகிருஷ்ணன் தம்பதியர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மகள் தனது காதலில் உறுதியாக இருந்துள்ளார். மேலும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி தனது காதலனுடன் அவர் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். தங்களது மகள் காதலனுடன் சென்றதால் விரக்தியடைந்த உன்னிகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி பிந்து, சில மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே உன்னிகிருஷ்ணன் – பிந்து தம்பதி மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக அவர்களது உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.