
காதலியுடன் உல்லாசமாக இருந்த நிலையில், காதலி கர்ப்பமடைந்ததும், இரவு முழுவதும் வாட்ஸ்-அப்பில் சாட் செய்து விட்டு, விடிந்ததும் வேறு ஒரு பெண்ணை இளைஞர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் தேவிகா (29). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மதுராந்தக தோட்டத்தெருவைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில், கார்த்திக் மதுப் பழக்கத்திற்கு அடிமையானதால், 7 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 2020ல் தேவிகா தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைப் பார்த்து வந்தபோது, அதே நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்த சரத்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
தேவிகாவுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாகத் தெரிவித்த போதிலும் சரத்குமார், அவரை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து இருவரும் ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
திருமணத்திற்குப் பிறகு, கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்த இருவரும் அவ்வப்போது உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் தேவிகா கர்ப்பமடைந்தார். கருவைக் கலைக்குமாறு சரத்குமார் தேவிகாவை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வரை தேவிகாவுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்த சரத்குமார், விடிந்ததும் திங்கட்கிழமை வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து அறிந்து தேவிகா அதிர்ச்சியடைந்த நிலையில், சரத்குமாரிடம் கேட்டபோது, அவரது குடும்பத்தினர் தேவிகாவை ஆபாசமாகத் திட்டி அனுப்பியுள்ளனர்.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த தேவிகா, சரத்குமார் மீது காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”சரத்குமாரை நம்பி ரூ.1 லட்சம் கடன் வாங்கி கொடுத்தேன்.
மேலும் 3 சவரன் நகைகளையும் கொடுத்தேன். அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. இதனைத் தட்டிக் கேட்டதால் சரத்குமாரின் குடும்பத்தினர் என்னை மிரட்டுகின்றனர். சரத்குமார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் இழந்த பொருட்களை மீட்டுத் தர வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்” என்று தெரிவித்தார்.















