காதல் திருமணம் செய்த மகன்… பெற்றோர் எடுத்த விபரீத முடிவு!!

41

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள புள்ளம்பாடி அண்ணாநகரைச் சேர்ந்தவர் ரமேஷ் (48). இவர் மரம் வெட்டும் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுமித்ரா (38). இவர்களுக்கு முருகானந்தம் (21) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. முருகானந்தம் கடந்த ஓராண்டுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வருகிறார்.

ரமேஷ் தனது சொந்த வீட்டில் மனைவியுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் ரமேஷ் மற்றும் அவரது மனைவி சுமித்ரா காதல் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.

குடிப்பழக்கத்திற்கு அடிமையான முருகானந்தம், வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு பெற்றோரை அடித்து வீட்டை காலி செய்யும்படி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. நேற்று வழக்கம் போல் முருகானந்தம் போதையில் வந்து பெற்றோரை துன்புறுத்தியுள்ளார்.

இதனால் மனமுடைந்த ரமேஷ், மனைவியுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, நேற்று மாலை அரளி விதையை அரைத்து, இருவரும் குடித்தனர். அக்கம் பக்கத்தினர் இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே ரமேஷ் இறந்தார்.


மேலும் சுமித்ரா திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் சுமித்ரா இறந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.