காவல்துறையினருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி உத்தரவு!!

924

குத்தகை வசதிகளின் கீழ் வாகனங்களை கொள்வனவு செய்து கடன் தவணைகளை செலுத்தத் தவறும் நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்வதற்கு குத்தகை நிறுவனங்கள் பின்பற்றும் முறைமை சட்ட விரோதமானது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எனவே, அதற்கு ஒருபோதும் இடமளிக்க வேண்டாம் என காவல்துறையினருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குத்தகை நிறுவனங்கள் அவ்வாறு வாகனங்களை பறிமுதல் செய்வதற்கு முன்னர் காவல்துறையினருக்கு தெரியப்படுத்துவதில்லை.

வாகனத்தை பறிமுதல் செய்ததன் பின்னரே அவர்கள் காவல்துறையில் முறைப்பாடு செய்கின்றனர்.

பலவந்தமாக மேற்கொள்ளப்படும் இத்தகைய பறிமுதல்கள் சில சந்தர்ப்பங்களில் பாரதூரமான வன்முறைக்கு காரணமாகின்றது.


எனவே, பறிமுதல் செய்ததன் பின்னர் கிடைக்கும் முறைப்பாடுகளை மறு அறிவித்தல் வரை பொறுப்பேற்க வேண்டாம் என காவல்துறைமா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவுக்கு, ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

கொவிட்-19 பரவலுடன் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு குழுவினருக்கு அரசாங்கம் வழங்கிய நிவாரணங்களின் கீழ் முச்சக்கர வண்டி உரிமையாளர்களினால் செலுத்தப்படும் குத்தகை கடன் தவணையை அறவிடுவதை 6 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டது.

ஜனாதிபதியின் செயலாளரின் கையொப்பத்துடன் கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி வெளியிடப்பட்ட 16ஃ2020 ஆம் இலக்க சுற்றுநிருபத்தின் இரண்டாவது பிரிவில் அது பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், கடன் தவணை செலுத்தாததன் அடிப்படையில் வாகனங்களை பறிமுதல் செய்வது அரசாங்கத்தின் உத்தரவை மீறும் செயலாகும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, கடன் தவணை செலுத்தாததன் காரணமாக வாகனங்களை பறிமுதல் செய்வதற்கு இடமளிக்க வேண்டாம் என்று காவல்துறையினருக்கு ஜனாதிபதி பணித்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்த பணிப்புரை அனைத்து காவல்துறை பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.