பஞ்சாப் மாநிலத்தில்..

பஞ்சாப் மாநிலம், டர்ன் தரன் மாவட்டம் துங் கிராமத்தில் வசித்து வருபவர் இக்பால் சிங். இவரது மனைவி லக்விந்தர் கவுர். இவரது சகோதரி சீதா கவுர். இவர்கள் மூவரும் இன்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இந்த தகவலின் பேரில் போலீஸார் இக்பால் சிங் வீட்டிற்கு வந்து வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது அதிர்ச்சியடைந்தனர். அங்கு இக்பால் சிங், அவரது மனைவி லக்விந்தர் கவுர், சீதா கவுர் ஆகியோர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், வெவ்வேறு அறைகளில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். நேற்று இரவு அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

காவல்துறையினர் கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த திடீர் 3 கொலைகள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்ட போது அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில் இக்பால் சிங் வீட்டில் வேலைசெய்த வேலைக்காரர் தான் இந்த கொலைகளைச் செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இவர்கள் மூவரையும் கட்டிப்போட்டு கொலை செய்து விட்டு வீட்டில் உள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து தலைமறைவாகியுள்ள வீட்டின் வேலைக்காரரை போலீஸார் தேடி வருகின்றனர். கை, கால்களைக் கட்டி மூவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பஞ்சாப்பில் பெரும் பரபரப்பையும் , அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.















