சிகிச்சை தாமதமானதால் பிரசவத்தின் போது அரசு மருத்துவர் உயிரிழப்பு!!

91

புதுக்கோட்டையில் மருத்துவமனைக்கு தாமதமாக அழைத்துச் செல்லப்பட்ட அரசு மருத்துவர், இரட்டைக் குழந்தைகளை பிரசவித்துவிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்தவர்கள் ராசு – தமிழரசி தம்பதி. கூலித் தொழிலாளிகளான இவர்களுக்கு 5 மகள்கள் மற்றும் 2 மகன்கள். கூலி வேலை செய்தே இவர்கள் அக்த்தனை பேரையும் படிக்க வைத்துள்ளனர்.

இப்போது பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. இவர்களது 4-வது மகள் அஞ்சுதா (26) அரசுப் பள்ளியில் பயின்றவர். மருத்துவப் படிப்பையும் அரசுக் கல்லூரியிலேயே முடித்துவிட்டு மகப்பேறு மருத்துவராக சொந்த ஊரான புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.

கடந்த ஆண்டு இவருக்கும் பெங்களூருவைச் சேர்ந்த பல் மருத்துவரான கார்த்திக் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. கார்த்திக் தற்போது மலேசியாவில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். கர்ப்பமான அஞ்சுதா, கடந்த 6 மாதங்களாக மகப்பேறு மருத்துவ விடுப்பில் தாய் வீட்டில் இருந்தார்.

மனைவியின் பிரசவத்துக்காக கார்த்திக் சமீபத்தில் நாடு திரும்பி இருந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை, திடீரென அஞ்சுதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது மூச்சு திணறலும் அதிகரித்ததால் அவரை புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்துச் சென்றனர்.


அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவரது கருப்பைக் குழாயில் ரத்தப்போக்கு அதிகரித்ததால், அறுவை சிகிச்சை மூலம் கருவில் இருந்த இரட்டை ஆண் குழந்தைகளை மருத்துவர்கள் கவனமுடன் வெளியே எடுத்தனர். அப்போது ஏற்பட்ட அதிகப்படியான ரத்தப்போக்கு மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக அஞ்சுதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது இரண்டு குழந்தைகளும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதனிடையே அஞ்சுதாவின் மறைவுக்கு அரசு மருத்துவர்கள், சக மருத்துவர்கள் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது எக்ஸ் தள த்தில் ’தன் பிஞ்சு குழந்தைகளின் முகம் கூட காணாமல் மருத்துவர் அஞ்சுதா உயிரிழந்தது பெருந்துயரம். மகப்பேறு காலத்தில் நேரத்தின் அருமையை நன்கறிந்து எத்தனையோ பிரசவங்கள் செய்திருக்க வேண்டிய மகப்பேறு மருத்துவர், காலதாமதத்தால் உயிரிழந்தது சொல்லிலடங்கா துயரம். அவரை இழந்து வாடும் கணவர் கார்த்திக்கிற்கும் பெற்றோருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

மருத்துவமனைக்கு தாமதமாக அழைத்துச் செல்லப்பட்டதே அஞ்சுதா உயிரிழக்கக் காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.