‘சீட்டிங் கேஸ்’ மனைவி மற்றும் அவரது இந்தியக் கணவனுக்கு எதிராக, வழக்கு தொடுத்த பாகிஸ்தான் கணவர்!!

53

சீமா ஹைதரின் பாகிஸ்தான் கணவரான குலாம் ஹைதர் இந்தியாவிலுள்ள நொய்டா நீதிமன்றத்தில், சீமா மீதும் அவரது இந்தியக் கணவர் சச்சின் மீதும் ‘சீட்டிங் கேஸ்’ தொடர்ந்திருக்கிறார். அந்த வழக்கின் தற்போதைய விசாரணை மற்றும் விவாதங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

பாகிஸ்தானின் சீமா ஹைதர் – இந்தியாவின் சச்சின் மீனா இடையிலான காதல் கல்யாணத்தில் முடிந்து கிட்டத்தட்ட ஒரு வருடமாகப் போகிறது. கடந்த ஆண்டு மே மாதம் ஆன்லைனில் சந்தித்ததில் இருவருக்கும் இடையே காதல் முளைத்தது.

பின்னர் இருவரும் நேபாளத்தில் திருமணம் முடித்தனர். தொடர்ந்து சச்சின் உடன் சேர்ந்து வாழ்வதற்காக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தார் பாகிஸ்தானின் சீமா ஹைதர்.

தற்போது இந்த சீமா ஹைதரின் பாகிஸ்தான் கணவரான குலாம் ஹைதர், நொய்டா நீதிமன்றத்தில் மனைவி சீமா மற்றும் அவரது இந்தியக் கணவனுக்கு எதிராக ’தன்னை திட்டமிட்டு ஏமாற்றியதாக’ குற்றம் சாட்டி வழக்கு தொடுத்துள்ளார்.

குலாம் ஹைதரின் இந்திய வழக்கறிஞர் மோமின் மாலிக் என்பவர், குற்றவியல் சட்டம் பிரிவு 156(3) என்பதன் சீமா-சச்சின் தம்பதிக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கினார்.


மனைவி சீமா தன்னிடமிருந்து முறைப்படி விவாகரத்து பெறாது இந்தியாவில் மணம் புரிந்திருப்பதாகவும், இதனால் அவரது புதிய கல்யாணம் செல்லாது என்றும் நொய்டா நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.

நீதிமன்ற விசாரணையின் போது, ​​சச்சினை திருமணம் செய்து கொண்டதாக சீமா பகிரங்கமாக தெரிவித்துள்ளார். ஆனால் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததற்காக சீமா கைது செய்யப்பட்டபோது.

அதற்கான ஜாமீன் மனுவில், குலாம் ஹைதரை தனது கணவர் என்றே சீமா அடையாளம் காட்டி இருந்ததை, குலாம் ஹைதரின் வழக்கறிஞர் முக்கிய வாதமாக நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளார். இது தொடர்பாக ஏப்ரல் 18-க்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நொய்டா போலீஸாருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

கடந்த ஆண்டு ஜூலை 3 அன்று சீமா – சச்சின் ஜோடி நொய்டா போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். வெளிநாட்டினர் தொடர்பான சட்டப் பிரிவு 14 மற்றும் குற்றவியல் சதி தொடர்பான ஐபிசி பிரிவு 120பி ஆகியவற்றின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்கள் ஜூலை 7 அன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் உடன் கைது செய்யப்பட்ட சச்சினின் தந்தையும் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

தற்போது இந்து மதத்தைத் தழுவி இருக்கும் சீமா ஹைதர், பாகிஸ்தானுக்கு திரும்பப் போவதில்லை எனவும் தெரிவித்திருக்கிறார். தனது முந்தைய திருமணத்தில் பிறந்த 4 குழந்தைகளும் இந்து மதத்தைத் தழுவச் செய்திருப்பதாகவும் சீமா தெரிவித்துள்ளார். இதற்கிடையே இந்திய குடியுரிமை கோரி ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு சீமா ஹைதர் கடிதமும் எழுதியுள்ளார்.