செப்டிக் டேங்க் மீது விளையாடி கொண்டிருந்த 2 சிறுமிகளுக்கு நேர்ந்த சோகம்!!

547

தேனி..

தேனி மாவட்டம் உத்தம்பாளையம் அருகே பண்ணைப்புரம் உள்ளது. கிராமத்தின் பாவலர் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன் இவருக்கு 7 வயதில் நிகிதாஸ்ரீ என்ற மகளும், அதே பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் என்பவருக்கு 6 வயதில் சுபஸ்ரீ என்ற மகளும் இருந்தனர்.

தோழிகளான இருவரும் அரசுப்பள்ளியில் 2ம் வகுப்பு படித்துவந்தனர். இந்நிலையில் சிறுமிகள் இருவரும் வியாழக்கிழமை மாலை அப்பகுதியில் உள்ள பெண்கள் பொது சுகாதார வளாகத்தின் கழிவு நீர் தொட்டியில் மேல் சேர்ந்து விளையாடியுள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக தொட்டியின் சிமெண்ட் கல் மேல் மூடி உடைந்ததில் சிறுமியர் இருவரும் தவறி தொட்டிக்குள் விழுந்துள்ளனர். சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் – பக்கத்தினர் தொட்டிக்குள் விழுந்த சிறுமிகள் இருவரையும் போராடி மீட்டனர்.


நிகிதாஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சுபஸ்ரீ செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

சிறுமிகள் இருவர் உயிரிழந்த ஆத்திரத்தில் அவர்களின் உறவினர்கள் உத்தமபாளையம் – தேவாரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பல ஆண்டுகள் பழமையான கழிவுநீர் தொட்டியை பராமரிக்க பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை முறையாக நடிவடிக்கை எடுக்காததே சிறுமிகள் உயிரிழப்பிற்கு காரணம் என்று கூறி மறியலில் ஈடுபட்டனர்.