தமிழகத்தில்..

திருப்பூர் மாவட்டம் காங்கயம் பாளையங்கோட்டை சாலை பகுதியில் வசித்து வரும் தர்மலிங்கத்தின் மகள் 22 வயது ஸ்ரீகவி . இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தார்.

செமஸ்டர் தேர்வுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் கல்லூரியில் தேர்வு நடைபெற்றது. தேர்வு அறைக்குள் மொபைல் போன் வைத்திருக்க அனுமதியில்லை. ஆனால் மாணவி ஸ்ரீகவி மறந்துபோய் தேர்வு அறைக்குள் தனது செல்போனை எடுத்துச் சென்று விட்டார்.
இதனை கவனித்த தேர்வு அறையின் கண்காணிப்பாளர், ஸ்ரீகவியிடம் இருந்த மொபைல் போனை பிடுங்கினார். அத்துடன் நில்லாமல் அது குறித்து விளக்க கடிதம் ஒன்றையும் எழுதி தரச் சொல்லியிருக்கிறார்.

15 நாட்கள் கழித்து மொபைல் போனை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என ஸ்ரீகவியின் பெற்றோரிடம் தெரிவிக்கப்பட்டது. மற்ற மாணவ, மாணவிகள் எதிரில் அவரை கண்டித்ததால் அவருக்கு மிகுந்த அவமானமாகிவிட்டது.
இதனால் ஸ்ரீகவி மிகுந்த மன வருத்தத்துடன் காணப்பட்டார் . இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் ஸ்ரீகவி துணிகளை துவைத்து விட்டு அதை அவரது தாயாரிடம் கொடுத்து கீழே காய போட்டு வருமாறு சொல்லியுள்ளார்.

தாயார் துணிகளை எடுத்துக்கொண்டு கீழே சென்று காய போட்டுவிட்டு மேலே வந்து ஸ்ரீகவியை அழைத்தார். சத்தம் எதுவுமே கேட்கவில்லை. உடனே ஸ்ரீகவியின் அறைக்குச் சென்று எட்டிப் பார்த்தபோது அங்கு ஸ்ரீகவி மின்விசிறியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.

இதனை கண்ட அவரது தாயார் அலறி கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு ஓடி வந்து அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே ஸ்ரீகவி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.















