
மழைக்காலம் துவங்கி விட்ட நிலையில் தமிழகத்தில் மட்டுமல்லாமல் புதுவையிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நர்சிங் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களே வீட்டை மட்டுமல்லாமல் வீட்டைச் சுற்றிலும் சுத்தமாக வைத்திருங்க. மழைநீரையும், வீட்டைச் சுற்றிலும் தேவையில்லாமல் தண்ணீரைத் தேங்க விடாதீங்க.
மூலக்குளம் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண், நர்சிங் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 5ம் தேதி அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், குடும்பத்தினர் அவரை புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு பரிசோதனையில், டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியாகியதும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்றுவந்த போதும், காய்ச்சல் தீவிரமடைந்ததால் மேல்சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் வழியிலேயே அவரின் உடல்நிலை மோசமடைந்தது. உடனடியாக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் புதுச்சேரி மருத்துவ மாணவர்கள் மத்தியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.















