தம்பி மேல பாசத்த காட்ட இவ்ளோ பெரிய லெட்டரா? 12 மணி நேரம் கடிதம் எழுதிய அக்கா : சுவாரஸ்ய தகவல்!!

489

கேரள…

கேரள மாநிலம் பீருமேடு என்னும் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணப்ரியா. இவரது சகோதரர் பெயர் கிருஷ்ண பிரசாத்.

தன்னுடைய திருமணத்திற்கு பிறகு முண்டாகயம் என்னும் பகுதியில் வசித்து வரும் கிருஷ்ணப்ரியா, பெருவதனம் கிராம பஞ்சாயத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். சர்வதேச சகோதரர் தினமான மே 24-ஆம் தேதியன்று, தன்னுடைய சகோதரர் கிருஷ்ண பிரசாத்திற்கு, தவறாமல் வாழ்த்து சொல்வதை வழக்கமாக கொண்டுள்ளார் கிருஷ்ணப்ரியா. ஆனால், இந்த ஆண்டில் அவரது வேலைப்பளு காரணமாக தன்னுடைய தம்பிக்கு வாழ்த்து சொல்ல முடியாமல் போயுள்ளது.

இதனால், தனக்கும் தனது தம்பிக்குமான பாசம், உறவு, பிணைப்பு உள்ளிட்டவற்றை பற்றி, கிருஷ்ணப்ரியா எழுதத் தொடங்கிய கடிதம் மிக மிக நீளமாக சென்றதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் சுமார் பதினைந்து பேப்பர் பில் போடும் காகிதங்களின் ரோல்களை வாங்கி கடிதத்தை எழுதியுள்ளார். இந்த கடிதத்தை எழுத கிருஷ்ணப்ரியா சுமார் 12 மணி நேரம் எடுத்துக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, தனது கடிதத்தை சகோதரருக்கு அனுப்பி வைத்துள்ளார்.


வீடு தேடி வந்த பார்சல், சுமார் 5 கிலோ வரை இருந்ததால், அது ஏதோ பரிசுப் பொருளாக இருக்கும் என கிருஷ்ண பிரசாத் முதலில் நினைத்துள்ளார். ஆனால், அதனை திறந்து பார்த்தவருக்கு இன்ப அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. கிட்டத்தட்ட மிக மிக நீளமாக கடிதம் இருந்த நிலையில், தங்களுக்கு இடையேயான உறவு பற்றி மிக உணர்ச்சியுடன் தனது அக்கா எழுதி இருந்ததை பார்த்து நெகிழ்ந்து போனார்.

கடிதம் நீளமாக இருந்ததால், ஒரு ஆர்வத்தில் அதனை அளந்து பார்த்துள்ளார் கிருஷ்ண பிரசாத். அப்போது அது சுமார் 434 மீட்டர் நீளம் இருந்துள்ளது. இதனால், அந்த கடிதத்தினை கொல்கத்தாவில் அமைந்துள்ள யூனிவர்சல் ரெக்கார்ட் போரத்திற்கு அனுப்பியுள்ளார் கிருஷ்ணபிரசாத். கிருஷ்ணப்ரியா எழுதிய கடிதம், மிக நீளமான கடிதம் என்ற உலக சாதனையையும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சகோதரருடனான பாசம், நேசம் குறித்து, 5 கிலோ எடையில் 434 மீட்டர் அளவுக்கு சகோதரி எழுதி இருந்த கடிதம் தொடர்பான செய்திகள் மற்றும் பதிவுகள், இணையத்தில் அதிகம் வைரலாகி, கிருஷ்ணப்ரியாவிற்கு பாராட்டுக்களையும் பெற்றுக் கொடுத்து வருகிறது.