தவறான சிகிச்சையால் கல்லூரி மாணவிக்கு ஏற்பட்ட சோகம்!!

278

கிருஷ்ணகிரியில்..

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் வசித்து வருபவர் கார்த்திகேயன். இவரது மகள் பூஜாஸ்ரீ. இவர் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் அவருக்கு திடீரென உடல்நலக்குறைபாடு ஏற்பட்டதால் ஓசூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிகிச்சை காரணமாக மாணவியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக தெரிவித்தனர். ஆனால் மாலை 4.30க்கு மாணவியின் உடல்நிலை மோசமாகி விட்டதாகவும் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் வேறு மருத்துவமனைக்கு மாற்றிக்கொள்ளும்படி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

அதிர்ச்சி அடைந்த பெற்றோர், வென்டிலேட்டர் வசதி கொண்ட ஆம்புலன்சில் வைத்து வேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாணவி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகவும்,


முந்தைய மருத்துவமனையில் இதயத்தை துடிக்க வைக்க ஊசி போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். கடும் ஆத்திரம் அடைந்த பெற்றோர் தனியார் மருத்துவமனை முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்கள் மகளுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதே இதற்கு காரணம் என குற்றம்சாட்டியவர்கள், உரிய நீதி கிடைக்கும் வரை போராட இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கருமுட்டை களவு விவகாரத்தில் இந்த மருத்துவமனை சில காலம் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.