தாய் இறந்த 16 நாட்களிலேயே.. அடுத்தடுத்து உயிரிழந்த 5 மகன்கள்.. வெளியான சோக சம்பவம்!

782

ஜார்க்கண்ட் மாநிலம் டன்பெட் மாவட்டம் கட்ரஸ் பகுதியை சேர்ந்தவர் ராணி(88). இவருக்கு 6 மகன்கள் உள்ளனர். இதில் 5 பேர் ஜார்க்கண்ட் மாநிலத்திலும் ஒருவர் டெல்லியிலும் வசித்து வந்தனர்.

இதையடுத்து, மாத தொடக்கத்தில் டெல்லியில் நடைபெற்ற, தன்னுடைய உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ராணி மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி இருக்கிறார்.

ஊருக்கு திரும்பிய ஓரிரு நாள்களில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

ஆனால் சோதனை முடிவுகள் வருமுன்னரே கடந்த 4-ம் தேதி அவர் உயிரிழந்தார். தொடர்ந்து அவரது மகன்கள் 5 பேரும் சேர்ந்து அவரை அடக்கம் செய்தனர். அதற்கு அடுத்த நாள் அவரது சோதனை முடிவுகள் வெளியானது.


அதில் ராணிக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதியானது. இதனால் அதிர்ந்து போன அதிகாரிகள் அவருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா சோதனை செய்ய முடிவு செய்தனர்.

அதில் உயிரிழந்த ராணியின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 5 மகன்கள் உள்பட குடும்பத்தினர் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் அந்த குடும்பத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 (ராணியுடன் சேர்த்து) என உயர்ந்தது.

இதனால், அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்தனர். கடைசி மகனும் கடந்த 20-ம் தேதி இறந்தார்.

டெல்லியில் இருந்ததால் ஒரு மகன் மட்டும் தப்பித்து இருக்கிறார். தற்போது ராணியுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் கண்டுபிடித்து அதிகாரிகள் சோதனை நடத்திட முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் மொத்த ஜார்க்கண்ட் மாநிலத்திலும் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.