தினமும் குடித்துவிட்டு டார்ச்சர்.. ஆத்திரத்தில் கணவன் மீது வெந்நீரை ஊற்றி கொன்ற மனைவி!!

102

கன்னியாகுமரி மாவட்டம் குழிக்கோடு அருகே வண்டவிளை பகுதியை சேர்ந்தவர்கள் ஹரிதாஸ் (58), லதா (48). தம்பதிக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

கொத்தனார் வேலை செய்து வந்த ஹரிதாஸ் என்பவர் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு குடிபோதையில் வீட்டுக்கு வந்த ஹரிதாஸ் வழக்கம் போல் மனைவியிடம் தகாத வார்த்தைகளால் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மனைவி லதா, வெந்நீரை எடுத்து கணவர் மீது ஊற்றினார். அப்போது ஹரிதாஸின் முகம் மற்றும் உடல் முழுவதும் வெந்து வலியில் துடித்துள்ளார். பின்னர் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த உறவினர்கள் வந்து அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக ஹரிதாஸ் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஹரிதாஸ் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதற்கிடையே வெந்நீர் ஊற்றிய மனைவியை தக்கலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.