உத்தரப் பிரதேசம்….

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் பகுதியில் வசிக்கும் குடியா என்ற பெண்ணுக்கும், ராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மீரில் வசிக்கும் அங்கித் என்ற வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி அன்று உத்தரப் பிரதேசத்தில் உள்ள சந்தவுலி மாவட்டத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த உடன் புது ஜோடி மற்றும் உறவினர்கள் மண்பெண்ணின் உறவுக்கார பெண்ணான நஜினா என்பவர் வீட்டிற்கு விருந்துக்காக வாரணாசி சென்றுள்ளனர். அங்கு விருந்து முடித்துக்கொண்டு மாப்பிள்ளை சொந்த ஊரான அஜ்மீருக்கு ரயில் ஏறியுள்ளனர்.

இவர்களுடன் நஜினா மற்றும் சோட்டூ கட்கானா என்ற மணப்பெண்ணின் இரு உறவினர்களும் உடன் வந்துள்ளனர். ரயலில் ஆட்டம் பாட்டம் என ஜாலியாக ஊர் சென்ற மணமகனின் வீட்டாருக்கு சோட்டூ டீ, பழம் உள்ளிட்ட உணவு பொருள்களை வாங்கித் தந்துள்ளார்.

அதை சாப்பிட்டதும் மணமகன் வீட்டார் மயக்கமடைந்து இருக்கையில் சாய்ந்துள்ளனர். அப்போது தான் மணப்பெண்ணின் சதிச் செயல் வெளியே அம்பலமானது. மாப்பிள்ளையிடம் கைவரிசை காட்டவே இந்த மோசடி திருமணத்திற்கு மணப்பெண் குடியா திட்டமிட்டுள்ளார்.

இந்த சதித் திட்டத்திற்கு நஜினா மற்றும் சோட்டூ துணையாக இருந்துள்ளனர். இவர்கள் மூவரும் சேர்ந்து திருமணம் செய்வதாக நாடகமாடி மணமகன் மற்றும் அவரது வீட்டாரை வலையில் வீழ்த்தியுள்ளனர்.

விருந்து விழாக்களை முடித்து ஊர் திரும்பும் நிலையில், உணவில் மயக்க மருந்தை கலந்து தந்துள்ளனர். மாப்பிள்ளை வீட்டார் மயக்கமடைந்த நிலையில், அவர்களிடம் இருந்து பணம், நகைகளை திருடிவிட்டு கான்பூர் ரயில் நிலையத்தில் இறங்கி மூவரும் தப்பி ஓடியுள்ளனர்.

நினைவு திரும்பியது தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளை வீட்டார் ரயில்வே காவல்துறையிடம் புகார் அளித்தனர். இந்நிலையில் மணப்பெண் குடியா மற்றும் உடந்தையாக இருந்து நஜினா ஆகியோரை ரயில்வே காவல்துற வாரணாசியில் கைது செய்துள்ளது.

முதல் கட்ட விசாரணையில் மணப்பெண் குடியாவுக்கு ஏற்கனவே ஒரு முறை திருமணமானவர் என்பதும் இது இவருக்கு இரண்டாவது திருமணம் என்பதும் அம்பலமானது. இதில் தொடர்புடைய மற்ற நபர்களையும் காவல்துறை வலைவீசி தேடி வருகிறது.















