திருமண வீட்டில் பள்ளி மாணவனுக்கு நேர்ந்த சோகம்!!

3625

திருவாரூரில்..

திருவாரூர் மாவட்டம் குடவாசல் தீபங்குடி தெற்குத் தெருவில் வசித்து வருபவர் விவசாய கூலித் தொழிலாளி ராஜசேகர். இவரது மகன் கனிஷ். கனிஷ் அரசு நடுநிலைப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் ராஜசேகரின் சகோதரர் பீட்டருக்கு திருமணம் நடைபெற இருந்தது. தங்களது ஓட்டு வீட்டின் முன்பக்கம் உள்ள கூரை கொட்டகையில் இருந்த கீற்றுகளை அகற்றிவிட்டு பந்தல் போடுவதற்கான வேலை நடந்து வந்தது.

வேலையாட்கள் கீற்றுகளை பிரித்து விட்டு கீற்று போடுவதற்காக விட்டுச் சென்ற நிலையில் அந்த கூரைக் கொட்டகையில் உள்ள மண்சுவர் அருகே விளையாடிக் கொண்டிருந்தான்.

திடீரென கனிஷ் மீது மண் சுவர் இடிந்து விழுந்துள்ளது. சுவர் மேலே விழுந்ததால் சிறுவனால் குரல் எழுப்ப முடியவில்லை. இடிபாடுகளுக்கிடையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான்.


இதனை சிறிது நேரம் கழித்து தான் குடும்பத்தினர் கவனித்தனர். உடனடியாக சிறுவனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து குடவாசல் போலீசார் சிறுவனின் உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கலகலப்பாக இருந்த கல்யாணவீடு துக்கவீடாக மாறியுள்ளது.