நடத்தையில் சந்தேகம் மனைவி வெட்டிக் கொலை.. கணவர் வெறிசெயல்!!

52

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் வாக்குவாதம் முற்றிய நிலையில், தூத்துக்குடி அருகே மனைவியை கணவர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகேந்திரன் (54). லாரி டிரைவரான இவருக்கும் மதுரையைச் சேர்ந்த ரெஜினாமேரி (47) என்பவருக்கும் கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு சதீஷ்குமார் என்ற மகனும், வர்ஷினி என்ற மகளும் உள்ளனர். இதில் சதீஷ்குமார் திருமணம் முடிந்து தனது மனைவியுடன் ஓசூரில் வசித்து வருகிறார். வர்ஷினி கோவையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், நாகேந்திரன் தனது மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி அவரிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ரெஜினா மேரி ஓசூரில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்று விட்டார். முத்தையாபுரத்தில் வசித்து வந்த வீடு ரெஜினா மேரி பெயரில் உள்ளது. அதை ரெஜினா மேரி பெயரிலும், கணவர் நாகேந்திரன் பெயரிலும் சேர்த்து மாற்றம் செய்வதற்கு குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெஜினா மேரி சொந்த ஊருக்கு வந்தார். இதற்கு சாட்சி கையெழுத்து போடுவதற்காக தனது தாயார் ரஞ்சிதம் (75) என்பவரையும் அழைத்து வந்தார். நேற்று மீண்டும் கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த நாகேந்திரன் வீட்டில் இருந்த கத்தி, அரிவாளால் சரமாரியாக ரெஜினா மேரியை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்தார். பின்னர் நாகேந்திரன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.


இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ரெஜினா மேரியை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நாகேந்திரனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.