திருமணத்தை மீறிய உறவுக்குத் தடையாக இருந்த நண்பனுக்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநரால் அரங்கேறிய கொடூரம்!!

597

ஈரோடு…

சத்தியமங்கலம் அடுத்த மேட்டூர் வாய்க்கால் கரையில் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்த இளைஞரின் உடலை சத்தியமங்கலம் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கொலையாளியை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்.

இறந்த கிடந்த இளைஞரின் செல்போன் பதிவுகளை கொண்டு நடத்திய விசாரணையில், கொலையான நபர் தனியார் பள்ளி ஓட்டுநர் மாரிமுத்து (35) என்பதும், இவருக்கு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றும் கல்யாணி என்ற மனைவி இருப்பதும் தெரியவந்தது.

இந்த கொலை வழக்குத் தொடர்பாக மாரிமுத்துவின் குடும்ப நண்பரான 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மோகனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மாரிமுத்துவின் மனைவி கல்யாணிக்கும் ஆம்புன்ஸ் ஓட்டுநர் மோகனுக்கு இடையே நீண்ட நாள்களாக திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.


இந்த சூழலில் மாரிமுத்து அடிக்கடி மோகனிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாகவும், மேலும் மாரிமுத்துவின் மனைவியோடு கொண்ட உறவுக்கு தடையாக மாரிமுத்து இருந்ததாகக் கருதி, மேட்டூர் வாய்க்கால் கரையில் மது குடிக்க வைத்து மாரிமுத்துவை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளதாகவும் போலீசாரிடம் மோகன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்தக் கொலை தொடர்பாக உயிரிழந்த மாரிமுத்துவின் மனைவி கல்யாணியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். கைதான ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மோகனை, கோபிசெட்டிபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். உயிரைக் காப்பாற்ற வேண்டிய ஆம்புலன்ஸ் ஓட்டுநரே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.