நிறைமாத கர்ப்பிணியாக களத்தில் இறங்கும் GRAND MASTER : யார் இந்த ஹரிகா துரோணவல்லி?

258

ஹரிகா…

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி 1927-ம் ஆண்டு முதல் பல்வேறு நாடுகளில் நடந்தாலும், செஸ் போட்டியின் தாயகமாக விளங்கும் தமிழ்நாட்டை உள்ளடக்கிய இந்தியாவில் இதுவரை நடந்ததில்லை. இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் செஸ் ஒலிம்பியாட்டின் 44-வது போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை (ஜூலை 28) தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் இந்த போட்டியில், உலகம் முழுவதும் 190 நாடுகளில் இருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்க வரும் வீரர்கள், வீராங்கனைகள் தங்குவதற்காக சென்னை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் ஓட்டல்கள், விடுதிகளை தமிழக அரசு எடுத்துள்ளது. மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரியில் 52 ஆயிரம் சதுர அடியில், நவீன விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், நாளை நடக்கவிருக்கும் செஸ் போட்டியில், இந்தியா சார்பில் 6 அணிகள் களமிறங்குகின்றன. அதில் ஓபன் பிரிவில் 3 அணிகளும், பெண்கள் பிரிவில் 3 அணிகளும் களம் இறங்குகிறது. மொத்தம் 30 வீரர்/வீராங்கனைகள் 6 அணிகளாக களமிறங்குகின்றனர்.

இந்த போட்டியில் பெண்கள் சீனியர் பிரிவில் இருக்கும் ஆந்திராவைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் துரோணவள்ளி ஹரிகா (வயது31) தற்போது அதிக கவனத்தை ஈர்த்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் இவர் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொள்ள மிகவும் ஆர்வத்துடன் களத்தில் இறங்கியுள்ளார்.

தற்போது உலக தரவரிசையில் 11-வது இடத்தில் இருக்கும் ஹரிகா, தனது 9 மற்றும் 10 வயதிலே தேசிய அளவிலான செஸ் போட்டியில் சாம்பியன் பட்டங்களை வென்றார். கடந்த 2008 ஆம் ஆண்டு இவரது சாதனையை கெளரவிக்கும் விதமாக ஒன்றிய அரசு இவருக்கு அர்ஜூனா விருது வழங்கி கெளரவித்தது.

இதையடுத்து கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த செஸ் போட்டியில் ‘கிராண்ட் மாஸ்டர்’ பட்டம் பெற்றதோடு, 2012, 2015, 2017-ம் ஆண்டுகளில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஹரிகா மூன்றாம் இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். இவரது இந்த தொடர் சாதனைகளை ஊக்குவிக்கும் வகையில், கடந்த 2019-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது.

இந்த நிலையில், தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஹரிகா, சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொள்ள மிகவும் முனைப்போடு அதற்கு தன்னை தயார்படுத்தி வருகிறார். எனவே ஹரிகாவுக்கு தேவையான சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனம், மருத்துவக்குழு என சிறப்பு ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக இந்த போட்டியில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து விளையாடும் நிலை உள்ளதால், நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஹரிகா அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். மேலும் இவர் வெற்றிபெற பல்வேறு தரப்பினரிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணமாக காணப்படுகிறது.

இந்தியா அதிக பதக்கங்களை வெல்ல வாய்ப்புள்ளதாக உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற மேக்னஸ் கார்ல்சன் தெரிவித்துள்ள நிலையில், கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற, தென்னிந்தியாவை சேர்ந்த ஹரிகா இந்த தொடரில் இந்தியாவுகு பெருமை சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.