ராணிப்பேட்டை..

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டம் தகரகுப்பம் ஊராட்சி ஒட்டனேரி கிராமம் ராமர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி கவுதமி(32). தம்பதிக்கு பவானி(9) மற்றும் நரசிம்மன்(7) ஆகிய குழந்தைகள் உள்ளனர். முனுசாமி 3 ஆண்டுகளுக்கு முன்பு உடலக்குறைவால் இறந்து விட்டார்.

இதனால் கவுதமி ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து, குழந்தைகளுடன் வசித்து வந்தார். நேற்று வழக்கம்போல் தனது தோழிகளுடன் வேலைக்கு சென்ற கவுதமி, பணி முடித்து விட்டு அவர்களுடன் வீட்டுக்கு வந்துக்கொண்டு இருந்தார்.

இந்நிலையில், நேற்று மாலை 6.45 மணியளவில் ஒட்டேரி மலையடி வாரத்தில் பைக்கில் வந்த மர்ம நபர் கவுதமியை மடக்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமடைந்த அந்த நபர் தான் மறைத்து வைத்து இருந்த இரும்பு ராடை எடுத்து, கவுதமியை சராமாரியாக தாக்கினார்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த கவுதமி ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயங்கி விழுந்து துடிதுடித்து உயிரிழந்தார். மேலும், இதனை தடுக்க சென்ற அவரது தோழியையும் அந்த நபர் தாக்கியதில் அவரும் படுகாயமடைந்தார்.

தகவலறிந்து, வந்த சோளிங்கர் காவல் ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் காவல் துறையினர் படுகாயமடைந்த பெண்ணை வாலாஜா அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த கவுதமியின் உடலை கைப்பற்றி அதே மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், அரக்கோணம் உதவி காவல் காண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக் வந்து விசாரணை மேற்கொண்டார். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கணவர் இழந்த கவுதமிக்கு அதே பகுதியில் வசித்து வரும் கவுதமியின் தங்கை பிரியாவின் கணவர் இரும்பு கடையில் வேலை செய்யும் சஞ்சீவிராயன்(28) என்பவருக்குமிடையே கள்ளக்காதல் ஏற்பட்டு இருவரும் பழகி வந்துள்ளனர்.

இதற்கிடையே, கவுதமிக்கு வேறு சில ஆண்களுடன் தொடர்பு இருப்பது சஞ்சீவிராயனுக்கு தெரியவந்தது. இதனால் சஞ்சீவிராயன் கவுதமியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆனால், கவுதமி தனது போக்கை மாற்றிகொள்ளாமல் இருந்து வந்துள்ளார்.

மேலும், சமீபகாலமாக சஞ்சீவிராயனுடன் பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று மாலை (31.12.2022) பணி முடித்து கவுதமி தனது தோழிகளுடன் வீட்டுக்கு வந்துக்கொண்டு இருந்தார்.

அப்போது, அங்கு பைக்கில் சென்ற அவர், கவுதமியை வழிமறித்து வாக்குவாதம் செய்துள்ளார். தகராறு முற்றியதில், ஆத்திரமடைந்து அவர் இரும்பு ராடால் கவுதமியை தாக்கி கொலை செய்து விட்டு தப்பியோடியது தெரியவந்துள்ளது.

தலைமறைவாக உள்ள சஞ்சீவிராயனை காவல் துறையினர் தேடி வருகின்றனர். தகாத உறவால் இளம்பெண் உயிரிழந்தது மட்டுமில்லாமல், தனது தங்கையின் வாழ்க்கையும் கேள்வி குறியாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.















