பாசன வாய்க்காலில் தவறி விழுந்து வளர்ப்பு மகன் பலி : கதறும் பெற்றோர்!!

424

கரூர் மாவட்டம் மாயனூர் தென்கரை வாய்க்கால் கரையில் உள்ள நீர்ப்பாலம் அருகே வசித்து வருபவர்கள் கணபதி (28), சித்ரா (26). இவர்களது மகள் நாய் கடித்து இறந்த பிறகு, கிஷாந்த் என்ற ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.

இன்று (நவம்பர் 20) ஒன்றரை வயதுக் குழந்தையான கிஷாந்திற்கு காலை உணவை ஊட்டிவிட்டு, வீட்டு வேலைகளைச் செய்தார் தாய் சித்ரா. அரை மணி நேரம் கழித்து, வீட்டிற்குள் தன் மகன் கிஷாந்தைத் தேடினார்.

பக்கத்து வீடுகளில் தேடியும் சிறுவன் இல்லாததால், பீதியடைந்த கிராம மக்கள், சிறுவன் பாசன வாய்க்காலில் தவறி விழுந்திருக்கலாம் என, மாயனூர் அணை நிர்வாக அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து தண்ணீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டு அப்பகுதி மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் கால்வாயில் சுமார் 1 மணி நேரம் தேடுதல் வேட்டை நடத்தி சிறுவன் கிஷாந்தின் சடலத்தை மீட்டனர்.

இதையடுத்து, மாயனூர் போலீஸார் வழக்குப் பதிந்து, சிறுவனின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.