பூட்டிய வீட்டுக்குள் தம்பதிக்கு நடந்த விபரீதம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

563

தூத்துக்குடி..

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள பெருமாள் நகர் பகுதியில் சேர்ந்தவர் ராஜபாண்டி (41). இவருக்கு பரணி செல்வி (39) என்ற மனைவியும், மனோஜ் குமார் (19) என்ற மகனும், உமா மகேஸ்வரி (15) என்ற மகளும் உள்ளனர்.

ராஜபாண்டி கொத்தனாராக பணியாற்றி வந்துள்ளார். அவரது மனைவி ராயல் மில் காலனியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இவர்கள் கடந்த ஜூலை மாதம் பெருமாள் நகர் பகுதியில் புதிதாக வீடு ஒன்றைக் கட்டி குடியேறியுள்ளனர்.

அந்த புதிய வீடு கட்டுவதற்கு அவர்கள் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.


இந்த நிலையில் நேற்று மாலை மனோஜ் குமார் பெட்டி கடைக்கு சென்றுள்ளார். அவர்களது மகள் உமா மகேஸ்வரியும் வெளியே சென்றதால் வீட்டில் கணவன், மனைவி மட்டும் இருந்துள்ளனர்.

கடைக்குச் சென்ற மனோஜ் குமார் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு உள்பக்கமாக பூட்டி இருந்துள்ளது. வெகு நேரமாக அவர் வெளியே நின்று கொண்டு கதவை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. அவர் தனது தாய் மற்றும் தந்தை இருவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போதும் இருவரும் எடுக்கவில்லை.

அதனால் சந்தேகம் அடைந்த மனோஜ் குமார் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறி, அவர்கள் கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் கதவை உடைத்து பார்த்த போது கணவன் மனைவி இருவரும் கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சரிந்து சடலமாக கிடந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்கள் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவ இடத்தை கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய வீடு கட்டியது தொடர்பாக அதிக அளவு கடன் ஏற்பட்டதால் அவர்கள் இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கியதில் உயிரிழந்தார்களா? அல்லது ராஜபாண்டி அவரது மனைவியை கொலை செய்துவிட்டு தானும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டாரா?

இல்லை வேறு எதுவும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.