போர் வந்தால் சீனா வெற்றி பெறும்… இந்தியா தோற்கும்! சீண்ட வேண்டாம் என எச்சரிக்கை!

265

சீனாவை சீண்டினால் இந்தியா தோல்வியடையும் என்றும், வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை என சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.

இந்தியா மற்றும் சீனா இடையே லடாக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட துவங்கியுள்ளது. லடாக் எல்லை பிரச்சனை தொடர்பாக இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சீனாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் வெய் பெங்கே இடையே ரஷ்யாவில் ஆலோசனை நடைபெற்றது.

சுமார் இரண்டு மணி நேரம் நடந்த இந்த ஆலோசனையின் போது, எல்லை பிரச்சனைக்கு காரணம் இந்தியா தான் என்று சீனா குற்றம் சாட்டியது. இந்தியாவோ சீனா எல்லையில் தேவையில்லாமல் அத்துமீறுவதாக தெரிவித்தது.

இந்நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து சீன அரசின் கண்காணிப்பில் இயங்கி வரும், அரசுக்கு நெருக்கமான குளோபல் டைம்ஸ் இதழில், இந்த ஆலோசனை குறித்து விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.


அதில், இந்தியா சீனா இடையே போர் வந்தால் அதில் சீனாதான் வெற்றிபெறும். இந்தியா அதை எப்போதும் நினைவில் கொண்டு செயல்பட வேண்டும்.

தேசிய அளவிலும், பொருளாதார அளவிலும், இராணுவ அளவிலும் இந்தியாவை விட சீனாதான் வலிமையான நாடு. இந்தியாவை விட சீனா பல மடங்கு சக்தி கொண்டது. இந்தியா மற்றும் சீனா இரண்டும் பெரிய நாடுகள் தான், ஆனால் இராணுவம், மோதல் என்று வந்தால் சீனாதான் சிறப்பானது. இந்தியா கண்டிப்பாக சீனாவை சீண்டினால் தோல்வி அடையும்.

எல்லை மோதல் போராக மாறினால் இந்தியாவிற்கு வெற்றிபெற வாய்ப்பே இல்லை. இரண்டு நாட்டு பாதுகாப்பு அமைச்சர்கள் இப்போது ஆலோசனை செய்துள்ளனர்.

இரண்டு நாட்டு உறவை இது மேம்படுத்தும் என்று நம்புகிறோம். எல்லையில் இதனால் பதற்றம் தணியும் என்று நம்புகிறோம். இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிய வேண்டும் . தேசியவாத கொள்கை காரணமாக இந்தியாவில் மக்கள் எல்லை பிரச்சனை மீது கவனம் செலுத்துகிறார்கள். இந்தியா தனது மக்களை கட்டுப்படுத்த வேண்டும்.

தங்கள் மக்களுக்கு தேவையானதை மட்டுமே கொடுக்க வேண்டும். அவர்களின் கவனத்தை முன்னேற்றத்தை நோக்கி திருப்ப வேண்டும். சீனா எல்லையில் அமைதியை மட்டுமே விரும்புகிறது. ஆனால் இந்தியா எல்லையில் அத்துமீற நினைக்கிறது என்று அந்த் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.