மனைவியை அவதூறாக பேசிய உறவினர்கள் : தட்டிக்கேட்ட கணவனுக்கு நேர்ந்த கதி!!

745

சென்னை..

சென்னையில் மனைவியை அவதூறாக பேசியவர்களை தட்டிக்கேட்ட கணவன் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாதவரம் பால்பண்ணை பகுதியைச் சேர்ந்தவர் மோகன்(34). ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வந்த இவர், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில், அவரது சகோதரர் செந்தில் நேற்று மதியம் மோகனை பார்க்க வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மோகன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த செந்தில், உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், மோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் பிரபு, ஜெயகுமார் ஆகிய இருவரை பொலிஸார் கைது செய்தனர்.


அவர்கள் இருவரும் மோகனின் உறவினர்கள் என்றும், ஒரே பகுதியில் வசிக்கும் மோகனுடன் மது அருந்த சென்றுள்ளனர் என்றும் தெரிய வந்தது. இந்த வழக்கு தொடர்பாக பொலிஸார் தரப்பில் கூறுகையில், மோகன் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் உறவினர்களான‌ அதே பகுதியை சேர்ந்த பிரபு (38), ஜெயகுமார் (34) மற்றும் சில நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது பிரபுவும், ஜெயகுமாரும் மோகனின் மனைவியை பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது. அப்போது பிரபுவும், ஜெயகுமாரும் மது பாட்டிலால் மோகனை கடுமையாக தாக்கிய நிலையில் மோகன் மயங்கியுள்ளார்.

பின் அனைவரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இந்நிலையில் பிரபு , ஜெயகுமாரை கைது செய்துள்ளோம். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகிறோம் என தெரிவித்தனர்.