காஞ்சிபுரம்..

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியை அடுத்த வல்லம் வடகால் அருகே கடந்த வாரம் இளம்பெண் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அங்கு வந்த போலீசார், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு வேண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதன் பின்னர், இறந்து கிடந்த பெண் யார் என்பது பற்றி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். விசாரணையில், காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்த பிரியாவின் உடல் என தெரிய வந்தது. தொடர்ந்து, கொலைக்கான காரணம் பற்றி அடுத்த கட்ட விசாரணைகளை மேற்கொண்ட போது, இன்னும் பல தகவல்கள் தெரிய வந்தது.

ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பிரியா,காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவருடன் வாழ்ந்து வந்துள்ளார். அதே போல, ஜோதி என்ற பெண் ஒருவருடன் சேர்ந்து, பாலியல் தொழிலிலும் பிரியா ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. வெங்கடேசன் மற்றும் ஜோதி மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்க இன்னும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. கடந்த ஆண்டுகளுக்கு முன், நவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார் பிரியா. இதனையடுத்து, இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்படவே, அவர்கள் பிரிந்து வாழ ஆரம்பித்துள்ளனர். அப்போது, கல்பனா என்ற பாலியல் தொழில் செய்யும் பெண் ஒருவருடன் நவீனுக்கு பழக்கம் ஏற்பட்டது.

மறுபக்கம், பாலியல் தொழில் செய்து வந்த பிரியா, முன்னாள் கணவர் நவீனை பார்க்கும் இடத்தில் எல்லாம் அவமதிக்கவும் செய்து வந்ததாக கூறப்படுகிறது. அதே போல, கல்பனா மற்றும் அவரது தம்பி காளிதாஸ் ஆகியோர், கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததை பற்றியும், போலீசில் தகவல் கூறி சிக்க வைத்துள்ளார் பிரியா.

பிறகு, சிறையில் இருந்து வெளியே வந்த கல்பனா, நவீனுடன் சேர்ந்து பிரியாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன் படி, காஞ்சிபுரம் பகுதியிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றிற்கு சமாதானம் பேசுவதாக கூறி, பிரியாவை வர செய்துள்ளனர். பின்னர் வேறொரு வீட்டிற்கு பிரியாவை அழைத்துச் சென்ற நவீன் மற்றும் கல்பனா ஆகியோர், அவரை அடித்து துப்பட்டா மூலம் கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

தொடர்ந்து, பிரியாவின் உடலை இரு சக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு, சுமார் 40 கி. மீ தூரம் பயணித்த நவீன் மற்றும் கல்பனா ஆகியோர், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள காலி நிலம் ஒன்றில் வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

நவீன் மற்றும் கல்பனாவை போலீசார் விசாரித்த போது, தொழில் போட்டி மற்றும் முன் விரோதம் காரணமாக கொலை செய்ததை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.















